சனி, 14 ஏப்ரல், 2012

சிறையில் பெண் வார்டனுடன் "உறவாடிய' போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி

திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற பெண், தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி, சிறையில் பெண் வார்டனிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தினார். இந்த "உறவுக்கு' தடையாக இருந்த வார்டனின் கணவரை, அபாண்டமாக புகார்களைக் கூறி, வீட்டிலிருந்து துரத்தினார் போலி பெண் அதிகாரி. காக்கி பேன்ட், வெள்ளை நிற சட்டையில், காரில் சுற்றி வந்த போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வேலூர் அடுக்கும்பாறை சுபம் நகரை சேர்ந்தவர் விஜயா பானு என்ற ஷிபா மேத்யூ,36. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த, விஜயா பானுவின் நட்பு வட்டாரம், சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. பார்ப்பதற்கு ஆணைப் போல் துருதுருவென இருக்கும் விஜயாபானு, சில மாதங்களுக்கு முன், கூடுவாஞ்சேரி போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலி ஐ.பி.எஸ்., :புழல் பெண்கள் சிறையில் வார்டனாக இருந்த விதேச்சனாவிடம், "நான் டில்லியில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எப்.,), ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுகிறேன். புழல் பெண்கள் சிறையில் நடைபெறும் முறைகேடுகள், பெண் கைதிகள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை கண்டறிய, சிறைக்குள் கைதியாக வந்துள்ளேன். உங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன' என, மிரட்டல் தொனியில் பேசினார். ஐ.பி.எஸ்., அதிகாரி வேடத்தில் இருக்கும் போட்டோவை, பெண் வார்டனிடம் காண்பித்தார். அதை உண்மை என நம்பிய விதேச்சனா, "கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் வசூலிக்கும் பணத்தை, நான் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்கிறேன்' என, உண்மையை உளறிக் கொட்டினார்.

ஓரினச் சேர்க்கை: சில நாட்கள் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்த விஜயா பானு, சிறை வளாகத்தில் உள்ள பெண் வார்டனின் வீட்டில் தங்கத் துவங்கினார். பெண் வார்டனுக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். விஜயா பானு, பெண் வார்டன் இருவரும், ஒரே படுக்கையில் தூங்கும் அளவுக்கு, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும், தனி அறையில் கதவை உட்புறமாக தாளிட்டுத் தூங்கும் போது, குழந்தைகள் வெளியே உட்கார்ந்து, "டிவி' பார்த்துக் கொண்டிருப்பர்.

சகோதரியாம்...?: பெண் வார்டனின் கணவர் அருளானந்தம், லிப்ட் டெக்னீசியனாக உள்ளார். மலேசியா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து விட்டு, சென்னை திரும்பியுள்ளார். வீட்டில் நடக்கும் கூத்தையெல்லாம் கவனித்த அருளானந்தம், விஜயா பானுவை வீட்டில் இருந்து வெளியேற்றுமாறு, மனைவியை கண்டித்தார். ஓரினச் சேர்க்கை உறவில் சுகம் கண்ட பெண் வார்டன், "விஜயா பானு என் சகோதரி. அவரை வெளியே அனுப்ப முடியாது' என, கணவரிடம் சண்டை போட்டார். அந்த விவகாரத்தில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட விஜயா பானு, "உன் கணவர் தினமும் எங்கெங்கு எல்லாம் செல்கிறார் என, உளவுத் துறையில் உள்ள ஒருவரை கண்காணிக்கச் சொன்னேன். உன் கணவருக்கு, வேறு சில பெண்களுடன் தொடர்பு இருக்கும் தகவல் எனக்கு கிடைத்துள்ளது' என, தோழியான பெண் வார்டனிடம், நேரம் பார்த்து பற்ற வைத்தார் விஜயா பானு.

விவாகரத்து மனு: இதற்கிடையே, கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டுமென, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார் பெண் வார்டன். அவ்வழக்கு, கோர்ட்டில் நடந்து வருகிறது. புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாறுதல் வாங்கிச் சென்றார் பெண் வார்டன். சிறை வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில், பெண் வார்டனும், விஜயா பானுவும் ஒன்றாக தங்கினர். வார்டன் வேலைக்கு செல்லாமல், கடந்த 9 மாதங்களாக, விஜயா பானுவுடன் வசித்தார்.

கமிஷனரிடம் புகார்: பெண் வார்டனின் சகோதரர் விமல்ராஜ், ஆவடியை சேர்ந்தவர். அவரிடம், போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை, தன் தோழி என அறிமுகப்படுத்தினார் பெண் வார்டன். விமல்ராஜிடம் சொத்து வாங்கித் தருவதாகக் கூறி, 2 லட்ச ரூபாயை வாங்கி ஏமாற்றினார். விஜயா பானுவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட விமல்ராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு அளித்தார். அதில், "என் சகோதரி விதேச்சனா, வேலூர் சிறையில் வார்டனாக உள்ளார். அவருடன் ஐ.பி.எஸ்., அதிகாரி என கூறிக் கொண்டு, ஒரு பெண் பழகி வருகிறார். என் சகோதரியின் கணவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டு, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். என்னிடம், 2 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். என்னை போன்று பலரிடம், நகையை வாங்கி அதை அடமானம் வைத்து, திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளார்' என கூறியுள்ளார்.

தனிப்படை: மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் வேதரத்தினம், இன்ஸ்பெக்டர் அமல் ஸ்டான்லி ஆனந்த், எஸ்.ஐ., மேரி ராஜு தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. ஐ.பி.எஸ்., அதிகாரி என கூறிக் கொண்டு, பேன்ட் சர்ட் கெட்டப்பில், காரில், சென்னையில் பல இடங்களுக்கு சென்று வந்த விஜயா பானுவை கைது செய்ய, போலீசார் திட்டமிட்டனர்.

ஒரு கோடி மோசடி: விஜயா பானு, புழல் சிறையில் இருந்த போது, பெண் கைதியான ஆசிரியை மேரி சேவியர் என்பவருடன் பழகியுள்ளார். மேரி சேவியரின் சொத்தை விற்று, அப்பணத்தை அவரிடம் தருவதாகக் கூறிய விஜயா பானு, ஆசிரியையின் சொத்தை வழக்கறிஞர்கள் சிலரின் உதவியுடன் வேறொருவருக்கு விற்று, அப்பணத்தை ஆசிரியையிடம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது தவிர, பல இடங்களில், பெண்களிடம் நன்றாகப் பேசி, 100 சவரன் நகைளை வாங்கி, நகையை கொடுத்தவர்களின் பெயரிலேயே அடமானம் வைத்து ஏமாற்றி, லட்சக்கணக்கில் மோசடி செய்த தகவலை, தனிப்படை போலீசார் சேகரித்தனர்.

3 பேர் கைது: எப்போதுமே, காரில் இரண்டு வழக்கறிஞர்களுடன் ஐ.பி.எஸ்., அதிகாரி வேஷத்தில் இருக்கும் விஜயா பானுவை , போலீசார்நேற்று கைது செய்தனர். விஜயா பானுவின் மோசடிக்கு உடந்தையாக இருந்த, அவரின் சகோதரியின் கணவரான, வேலூர் கன்னியம்பாடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தேவரசன்,52, மற்றும் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்த, புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் கப்ட்டர் சாலையை சேர்ந்த மதிவாணன்,30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலி ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்த விஜயா பானு என்ற ஷிபா மேத்யூ,36, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் தந்தை ஐ.டி.பி.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் வீட்டோடு இருப்பவர். எனக்கு 3 சகோதரர்கள், ஒரு சகோதரி. சென்னை மவுன்ட்டில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கில மீடிய பள்ளியில் படித்ததால், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவேன். என் அத்தான் (சகோதரியின் கணவர்) தேவரசன், எம்.காம்., படித்தவர். அவரின் மூன்றாவது மனைவி மருத்துவமனையில் வேலை செய்கிறார். மனைவிக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில், அத்தான் தங்கியுள்ளார். என் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, என்னை பெற்றோர் ஒதுக்கிய போது, எனக்கு அத்தான் தான் ஆதரவளித்தார். புழல் சிறையில் பெண் வார்டன் விதேச்சனாவின் நட்பு கிடைத்தது. எனது பேச்சை நம்பி, உண்மையான ஐ.பி.எஸ்., அதிகாரி என நம்பினார். பெண்களிடம் எளிதாக பேசி, அவர்களை நம்ப வைத்து விடுவேன். சிறை அதிகாரியே என்னை நம்பியதால், துணிச்சலாக மற்ற இடங்களில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்தேன். எனக்காக கணவரை வீட்டில் இருந்து விரட்டிய பெண் வார்டன், என்னுடன் நெருங்கினார். அவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, அவரிடம் பணம், நகையை ஏமாற்றி வாங்கினேன். அவரின் நண்பர்கள், உறவினர்களிடமும், நகையை வாங்கி அவர்களது பெயரிலேயே அடமானம் வைத்து ஏமாற்றினேன். தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாகவும், மேம்பாலம் கட்டுவதற்கு, கான்ட்ராக்ட் எடுக்கப் போவதாகவும் கூறி, பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றினேன். தவறான பழக்க வழக்கத்தால், எனது வாழ்க்கைப் பாதை மாறி விட்டது. இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் வார்டனுக்கு சிக்கல்: போலி ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்த விஜயா பானுவின் பேச்சைக் கேட்டு, கணவரை துரத்தியடித்த சிறை வார்டன் விதேச்சனாவை விசாரணைக்கு அழைத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், "ஒழுங்காக கணவருடன் சேர்ந்து வாழுங்கள். இயற்கைக்கு மாறான உறவால், இரு பெண் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால் தான், உங்களை வழக்கில் சேர்க்கவில்லை. திருந்தி வாழ ஒரு அவகாசம் கொடுத்துள்ளோம். இல்லையெனில், சிறையில் அதிகாரியாக இருந்த நீங்கள், சிறைக் கைதியாகி விடுவீர்கள்' என, மிரட்டல் கலந்த அறிவுரை வழங்கியுள்ளனர். கணவர் குழந்தைகளுடன் சேர்ந்து வாழாவிட்டால், போலி ஐ.பி.எஸ்., அதிகாரியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கில், அவரை கைது செய்வோம் என, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

ஐ.பி.எஸ்., அடையாள அட்டை தயாரித்தது எப்படி: போலி ஐ.பி.எஸ்., அதிகாரியான விஜயா பானுவின் கூட்டாளியான, புளியந்தோப்பை சேர்ந்த மதிவாணன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றில், தமிழகத்தில் உள்ள பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் போட்டோக்கள் இருந்தன. அந்த போட்டோவில் உள்ள தலையை மட்டும் வெட்டி, விஜயா பானுவின் தலையை ஒட்டி, போலி அடையாள அட்டை தயாரித்துள்ளார். இது போன்று, வேறு யாருக்காவது போலி அடையாள அட்டை தயாரித்துக் கொடுத்தாரா என்ற கோணத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: