வியாழன், 12 ஏப்ரல், 2012

காமராஜரா, எம்.ஜி.ஆரா?சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது


சென்னை, ஏப்.11: சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா என்பது தொடர்பாக அமைச்சர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:  தேமுதிக உறுப்பினர் கே.தமிழழகன் (திட்டக்குடி): வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.  அமைச்சர் பா.வளர்மதி: தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.  காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை): காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தைதான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார்.  அமைச்சர் கே.பி.முனுசாமி: காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.  அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்: அமெரிக்காவில் இருந்த வந்த கோதுமை, பால் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சில இடங்களில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  அமைச்சர் பா.வளர்மதி: காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகரில் சில பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.  பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத் (ஓசூர்): மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜர். அதனை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர். என்றார்.  "எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் இல்லை' என்று முதல்வர் ஜெயலலிதா 2011 ஆகஸ்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் படித்துக் காட்டினார்.

கருத்துகள் இல்லை: