சனி, 14 ஏப்ரல், 2012

மத்திய அரசு மாத ஊதியமாக. 1,20,000/-தொழிலாளர்களுக்கோ மாநில மாத ஊதியமாக ரூ.8,500/-

தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஊதிய விகிதப்படி சம்பளம் தரவேண்டும். என்.டி.சி. அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு மாத ஊதியமாக சுமார் ரூ. 1,20,000/-ஐ எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தனது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் என்.டி.சி தொழிலாளர்களுக்கோ மாநில அரசின் ஊதிய விகிதப்படி மாத ஊதியமாக சுமார் ரூ.8,500/- மட்டும் கொடுக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் ரூ.8,500/- சம்பளத்தை கொண்டு குடும்பத்தின் உணவு செலவையும், குழந்தைகளின் கல்விச் செலவையும், இன்ன பிற செலவுகளையும் சமாளிக்க இயலாமல் பாதி நாட்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு நிறுவன ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பு.ஜ.தொ.மு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஆகிய சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரண்டு 29.02.2012-அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பள பிடித்தம் செய்ய ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது. சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் திமிராக நடந்து கொண்டது நிர்வாகம். பிறகு தொழிலாளர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அஞ்சிய நிர்வாகம், தொழிலாளர்களின் எட்டு நாள் சம்பள பிடித்தத்தை ரத்து செய்தது. ஆனால் IDA உள்ளிட்ட 23 கோரிக்கையை ஏற்க மறுத்தது நிர்வாகம்.
மேற்கண்ட 23-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், பு.ஜ.தொ.மு-வை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும், 22.03.2012 அன்று கோவையிலுள்ள என்.டி.சி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு-வை சேர்ந்த கம்போடியா மில்லின் கிளைச் செயலாளர் தோழர். K. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் (C..I.T.U) பொதுச் செயலாளர் தோழர். C..பத்மநாபன் அவர்களும், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) துணை பொதுச் செயலாளர் தோழர். V.R..பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினார்கள். இறுதியாக கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (பு.ஜ.தொ.மு) பொதுச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் N..T.C -யின் தொழிலாளர் விரோத போக்கையும் கண்டித்து கண்டன உரையாற்றினார். மிகவும் எழுச்சிகரமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 225 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: