வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நெருங்கி பழகிய தோழிகள் தற்கொலை சேலம்


சேலம் நகரில் உள்ள கருங்கல்பட்டி, கலைஞர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பக்கத்தில் உள்ள ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 33). இவர்களுக்கு சத்தியா (வயது 15) என்ற மகளும், சதீஸ் (வயது 13) நடேசன் (வயது 8) என்ற இரண்டு மகனும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஈஸ்வரி சேலம் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் சிந்து (வயது 24) பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
பக்கத்து பக்கத்து வீடுகளில் உள்ள சுந்தரியும் சிந்துவும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். எதை வாங்கினாலும் இருவரும் ஒன்று போலவே வாங்குவார்கள்.
இரவு தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் நீங்க என்ன புருசன் பொண்டாட்டியா...? என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
இந்த வார்த்தைகளை கேட்ட சிந்துவின் பெற்றோர்கள் தங்களின் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார் சிந்து.
உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது எங்களின் கடமை... என்று கூறிய பெற்றோர்கள்.. திருமணத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக மகளின் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
நேற்றும் காலையில் மகளுக்கு திருமண செய்யலாம் என்று பேச்சு எழுந்துள்ளது, அப்போது தனக்கு தலைவலிப்பதாக கூறிய சிந்து தனது அறைக்கு சென்றுவிட்டார்.
இப்போது போய் படுத்து தூங்கு... நான் மதியம் வேலையை முடித்து கொண்டு வந்து உன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் சிந்துவின் தாயார் ஈஸ்வரி.
மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. கதவை பலமாக தட்டியும் சிந்து வந்து கதவை திறக்காததால் சந்தேகம் கொண்ட ஈஸ்வரி அக்கம் பாக்கம் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் மீது ஏறி வீட்டை பிரித்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
உள்ளே சித்துவும், சுந்தரியும் ஒரே சேலையின் முந்தானையால் ஆளுக்கு ஒரு பக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
தன்னுடைய விருப்பத்தையும் மீறி, தனக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்த சிந்து தனது நெருங்கிய தோழியை விட்டுபிரிய மனமில்லாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: