புதன், 1 பிப்ரவரி, 2012

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல் குறித்த விவரம்...சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் மீண்டும் எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக

கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார். இதற்கு அதிமுக

உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.

இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பெரும் அமளியாக இருந்தது.

இதைத் தொடர்ந்தே தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: