‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம். இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’
பிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த பார்வை குறைபாடு கொண்ட 70 மாணவர்களுக்கு அண்ணா நூலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பிரைல் பகுதி இரண்டாவது வீடாக மாறியிருக்கிறது. தமிழ் செவ்விலக்கியத்தில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் கே. சுதன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் இங்கே செலவிடுகிறார். ‘நற்றினை பற்றிய நூல்களைத் தேடும்போது, பேராசிரியர் பொற்கோவின் ஆடியோ ரிக்கார்டிங் ஒன்று கிடைத்தது. என்னால் விரைவாக குறிப்புகள் எடுக்கமுடியாது என்பதால் இந்த ஆடியோ பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. நல்ல பல பிரைல் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான இடம் இது.’ (தி இந்து, நவம்பர் 11).
இரண்டாவது மாடியில் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தளம் அமைந்துள்ளது. சில நிமிடங்கள் சுற்றிவர அனைவரும் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள் என்றாலும், எதிர்காலத்தில் ஒரு குழந்தையுடன் ஒரு மூத்தோர் மட்டுமே உள்நுழையலாம். குளிர் அறையின் நடுவே கண்ணைப் பறிக்கும் அழகுடன் படர்ந்து விரிந்திருக்கும் அந்த பிளாஸ்டிக் மரத்தின் அடியில் சுகமாக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கங்களில் விரிந்திருந்த ஒரு காண்டாமிருகத்தின்மீது தன் இரு கைகளையும் படரவிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அடுக்கும் குழந்தைகள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் ‘டாம் அண்ட் ஜெர்ரி இடம்’ எங்கிருக்கிறது என்றும் ‘அமர் சித்ர கதா வரிசை’ எங்கிருக்கிறது என்றும் ‘ரோபோ நாய் புத்தகம்’ எங்கிருக்கிறது என்றும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. சென்றமுறை படிக்க ஆரம்பித்து இடையில் நிறுத்திய பக்கத்தைத் தேடிப்பிடித்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள்.
கார்டூன்ஸ், பஞ்ச தந்திரக் கதைகள், நாடுகள், தலைவர்கள், அறிவியல், பொது அறிவுக் களஞ்சியம், தேவதைக் கதைகள் என்று ஆயிரக்கணக்கான நூல்கள் பொந்து போன்ற அடுக்குகளில் சீராக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. கட்டைவிரல் அளவுக்கு எழுத்துகள் கொண்ட பெரிய புத்தகங்களைக் கண்கள் விரிய குழந்தைகளும் பெரியவர்களும் ஒருங்கே எடுத்து பார்க்கிறார்கள். வண்ண வண்ண எபிசிடி, ஸ்பைடர் மேன், டின்டின், கோஸ்ட் ரைடர் தொடங்கி டால்ஸ்டாய், ஆஸ்கர் ஒயில்ட், மார்க் ட்வைன் வரை வயதுக்கேற்ற புத்தகங்கள் காணக்கிடைக்கின்றன.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்குள் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் திரண்டுவிட்டார்கள். பள்ளி மாணவர்கள் பலர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கே தவறாமல் வந்துவிடுகிறார்களாம். மினி சறுக்கு மரம், சீசா என்று சிறு விளையாட்டுத் திடலும் உள்ளது. குழந்தைகள் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலானவை ஆங்கிலம். தமிழ் மற்றும் பிற மொழி ஆக்கங்கள் சில ஆயிரம் இருக்கும். பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகள் ஒரு சிறு மலை போல் ஓரத்தில் காத்திருக்கின்றன. ‘மேலும் பல புத்தகங்களை ஆர்டர் செய்திருக்கிறோம், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.’ என்றார் அந்தப் பகுதியின் பொறுப்பாளர்.
குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற புத்தக அடுக்குகள், அமர்ந்து வாசிப்பதற்கு ஏற்ற வட்ட மேசைகள், பல வண்ண நாற்காலிகள் என்று கவர்ந்திழுக்கும் அம்சங்கள் பற்பல. பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தனியோர் உலகம் அது. டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றே வளர்ந்து பழகிய ஒரு தலைமுறைக்கு வாசிப்பின் ஈர்ப்பை இதைவிட சிறந்த முறையில் அறிமுகப்படுத்தமுடியாது.
நூலகப் பதிவேட்டின்படி ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 2500 பேர் வருகை தருகிறார்கள். முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகரிப்பு. முதல் முறையாக வருபவர்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது ஒரு காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து, குடும்பமாக வருபவர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 26,500 பேர் நூலகத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். (தி இந்து, நவம்பர் 9.)
செய்தித் தாள்கள், பத்திரிகைகள் தனியே ஒரு தளத்தில். கொண்டுவரும் புத்தகங்களைப் படிக்க ஒரு பிரிவு. மற்ற நூலங்களில் இல்லாத ஒரு வசதி இது. எப்போது சென்றாலும் இங்கே கூட்டம் நிரம்பியிருக்கிறது. ஒரு தளம், தமிழ் நூல்களுக்கானது. குடும்ப நாவல்கள், துப்பறியும் கதைகள், இலக்கியம், கவிதை, பயண நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், செவ்விலக்கியம், இலங்கைத் தமிழர் படைப்புகள், ஆன்மிகம், அம்பேத்கர் தொகுப்புகள் (பெரியார் அகப்படவில்லை!), வரலாறு என்று மாறுபட்ட ரசனைகளுக்கேற்ற தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி, கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, அலைகள், விடியல் என்று பல்வேறு பதிப்பாளர்களின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது நான்கு பிரதிகள் துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் எழுத்தாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளதால், வண்ணதாசனையோ, ஜெயமோகனையோ, ஜெயகாந்தனையோ, பொன்னீலனையோ தேடியெடுப்பது சிரமமாக இருக்காது.
‘பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நூலகத்தை மாற்றப்போவதாக அறிவிப்பு வந்தவுடன், உடனே பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன்.’ எம். சரண்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபார்மகாலஜி படிக்கும் மாணவி. ‘நான் பெரும்பாலும் ஐந்தாவது தளத்தில்தான் இருப்பேன்’ என்கிறார் டாக்ஸிகாலஜி படிக்கும் பொற்பாதம். ‘என் துறை சார்ந்த புத்தகங்கள் என் கல்லூரி நூலகத்தைவிட அதிகமாக இங்கே இருக்கின்றன.’ ‘நூலகங்கள் மட்டுமல்ல, புத்தகக் கடைகளிலும்கூட கிடைக்காத பல எஞ்சினியரிங் புத்தகங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன!’ என்கிறார் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர், செல்வம். (தி இந்து, நவம்பர் 9).
‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது. வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணிக்கணக்கில் இங்கே வந்து படிக்கமுடியும்.’ என்கிறார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பார்கவி. ‘எனக்குத் தெரிந்து, சாஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், புரோகிராமிங் என்று என் பணிக்குத் தேவைப்படும் அத்தனை புத்தகங்களையும் இப்படி ஒரே இடத்தில் இதற்கு முன்னால் பார்த்ததில்லை. ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும். வசதியில்லாதவர்களுக்கு இது பொக்கிஷம்.’
நூலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள குறைந்தது நான்கைந்து முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன். தமிழுக்கான தளம் தவிர்த்து பிற தளங்களில் துறை வாரியாக ஆங்கில நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மதங்கள் என்னும் பிரிவில், சூஃபிஸம் பற்றிய களஞ்சியம் மட்டும் இருபது பாகங்களில் உள்ளது. இந்தியத் தத்துவம் என்றால் வேதங்கள், உபநிஷத்துகள், லோகாயதம், நியாயா தத்துவம், வைசேஷிகம், சாங்கியம், சமணம், பௌத்தம், பகவத் கீதை, யோகம், வேதாந்தம், பக்தி இயக்கம் என்று ஒவ்வொரு தலைப்பிலும் நூற்றுக்கணக்கான பிரதிகள் உள்ளன. எந்தவொரு தேவாலயமும் பொறாமை கொள்ளும் வகையில் கிறிஸ்தவம் குறித்தும் தேவாலயங்களின் வரலாறு குறித்தும் பல ஆயிரம் நூல்கள். Baptists, Calvinism, Adventists, Puritans, Mormons, Pietism, Methodists, Lutherans, Anglicanism, Syrian Malabar Nasranis, Oriental Orthodox, Assyrian Church, Syrian Rites, Saint Thomas Christian groups, Vatican Council History, Restorationism என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இசை என்று எடுத்துக்கொண்டால், Instruments, Classical, Pop, Jazz, Country, Blues, Instrumental Ensembles, Keyboard Instruments, Electrophones, Percussion Instruments, Stringed Instruments, Wind Instruments, Recreational and Performing Arts என்று பிரிவுகள் படர்கின்றன. ஒவ்வொன்றிலும் குறைந்தது சில நூறு நூல்கள். மேஜிக் பற்றி எந்தவொரு புத்தகத்தையும் இதுவரை நான் பார்த்ததில்லை. இங்கே பி.சி. சர்க்கார் தொடங்கி பல நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்கள் பற்றியும் அவர்களுடைய கலை பற்றிய விவரங்களும் வரலாறுகளும் தனி அடுக்குகளில் உள்ளன.
கன்னிமராவில் வரலாற்றுக்கு ஒரு வரிசை இருக்கும். அதில் தோராயமாக பத்து அடுக்குகள் இருக்கும். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்று பிரித்து வைத்திருப்பார்கள். இங்கே வரலாற்றுக்குத் தனியொரு தளம். ஏழாவது மாடி முழுவதும் வரலாற்று நூல்கள். Historical Periods என்னும் வகையில் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என்று தேடிக்கொண்டே போகலாம். லிபியா, எகிப்து, சூடான், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, காமன்வெல்த் நாடுகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது நூறு, நூற்றைம்பது நூல்கள். அல்ஜீரியா பற்றியும் மொராக்கோ பற்றியும் பெரு பற்றியும் பாலினேஷியா பற்றியும் ஆர்க்டிக் தீவுகள் பற்றியும் இங்குள்ளது போன்ற நூல்களை வேறு எங்கும் கண்டதில்லை. நூற்றாண்டுகள் அடிப்படையிலும் காலவரிசையிலும்கூட பிரிவுகள் உள்ளன. 6th century to 12th centuries, 13th century, 14th century என்று தொடங்கி Modern History வரை தனித்தனி வரிசைகள். இரண்டாம் உலகப் போர் என்று எடுத்துக்கொண்டால் சில நூறு நூல்கள். படங்களும் வரைடபங்களும் அடங்கிய பெரிய அளவு புத்தகங்கள் தனி.
ஆங்கிலப் புதினப் பிரியர்களுக்கு ஒரு மாடிப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ், லத்தீன் அமெரிக்க, இந்திய இலக்கியங்களுக்கு இணையாக, ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், மொராக்கோ, ஜெர்மன் நாட்டுப் படைப்புகளும் நிறைந்துள்ளன. மற்ற தளங்களைக் காட்டிலும் இங்கே கூட்டம் அதிகம்.
Immigration Law and Procedure, Law of Income Tax, Commentaries on Indian Constitution என்று பல ஆயிரம் பக்க நூல்களின் அணிவகுப்புகள் ஒரு பக்கம். சட்டம், பொருளாதாரம் இரண்டுக்கும் தனிப் பெரும் தடுப்புகள். மலைப் பாம்பு போல் நீண்டு விரிந்திருக்கிறது தத்துவத்துறை. Knowledge என்னும் அடக்கமான தலைப்பின் கீழுள்ள பகுதிகள் இவை. Structure of Knowledge, Origin and Sources of Knowledge, Belief, Causation, Determination and indeterminism, Chance, Freedom, Necessity, The Self, Soul, Mind, Attributes and faculties.
இங்குள்ள ஹிப்னாடிசம் பிரிவை ஒருமுறை வெறுமனே கடந்து சென்றிருந்தால்கூட ஏழாம் அறிவு போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இது ஒரு சுருக்கமான பட்டியல் மட்டுமே. Perceptual Processes, Will (Self Contol), Intelligence and Aptitudes, Reasoning, Subconscious and altered states and process, Daydreams, fantasies, reveries, Sleep phenomena, Differential and developmental psychology, Individual psychology.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காணப்படுவதைப் போன்ற வரவேற்பறைகள் ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை இங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும் நுழைவுப் பதிவேடும் ஆலோசனைப் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. பத்து பக்கங்களைப் புரட்டினால் நூலகத்தை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மென்பொருள் பணியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக்காரர்கள், ஓவியர்கள்… இன்னும் பலர். மாணவர்களும் ஆய்வாளர்களும் அதிக எண்ணிக்கையில் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இடிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் மட்டுமல்ல, இருக்கவேண்டும் என்று சொல்பவர்களும் ஒருமுறை நூலகத்தை வந்து பார்த்துவிடவேண்டும். முதல் பார்வையிலேயே அதன் பிரமாண்டமும் வீச்சும் முக்கியத்துவமும் விளங்கிவிடும். ஒரே ஒருமுறை, ஒரு சில தளங்களை மட்டும் பார்த்துவிடுங்கள். புத்தக அடுக்குகளைக்கூட நீங்கள் நெருங்க வேண்டியதில்லை. எந்தவொரு பிரதியையும் தீண்டவேண்டியதில்லை. பரந்து விரிந்திருக்கும் கார்பெட் தரையில் அமைதியாக நடை போட்டால் போதும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திருத்தியமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா துடித்துக்கொண்டிருப்பது ஏன் என்பது விளங்கிவிடும்.
தெரியவில்லை. ஆனால், ஒரு புத்தகம், ஒரே ஒரு புத்தகம்கூட அவர் பெயரில் பார்த்த நினைவில்லை. எந்தவோரிடத்திலும் அவர் முகம் பார்த்த நினைவில்லை. அமர்ந்துவாசிக்கும் அண்ணாவின் உருவச்சிலை முகப்பில் இருக்கிறது. திறந்து வைத்தவர் என்னும் முறையில் முதல்வர் கருணாநிதியின் பெயர். அவ்வளவுதான்.
0
மருதன்
www.tamilpaper.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக