இடிந்தகரை : இடியாத மனங்கள்
ஒரு பாதிரியார் முதலில் எல்லோரையும் வரவேற்று பேசினார். அடுத்து ஒருவர் மிக விரிவாக அணு உலைகளினால் வரும் ஆபத்துகளை அறிமுகப்படுத்தியும், அணு உலை விபத்துக்களின் வரலாறு குறித்தும் விளக்கி பேசினார். ’1979ல் மூன்று மைல் தீவில் விபத்து நிகழ்ந்தபோது இதை சரி செய்துவிட்டோம். இனிமேல் இப்படி நடக்கவே நடக்காது என்றார்கள்.
அடுத்து 1986ல் செர்னோபில் நடந்தபோதும் இதை சரி செய்துவிட்டோம் இனிமேல் இப்படி நடக்கவே நடக்காது என்று சொன்னார்கள். அடுத்து ஃபுக்குஷிமாவுக்குப் பிறகும் இதையே சொல்கிறார்கள்.’ எல்லோருக்கும் புரியும்படியும் சரியான தரவுகளோடும் இவர் பேசியதைக் கேட்கையில் மொத்த போராட்டமும் பல கவனிக்கத்தக்க உரையாடல்களையும் சிந்தனைகளையும் உருவாக்கியிருக்கக்கூடும் என்
மக்கள் கவலை மிகுந்த முகங்களுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். பலரும் அவ்வப்போது கூட்டத்திலிருந்து பதிலுரைப்பதும் ஊக்குவிப்பதுமாக இருந்தனர். போராட்டப் பந்தலில் தண்ணீர் குடுவை வைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது சிலர் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தனர். அடுத்த பேச்சாளர் கொஞ்சம் கிராமத்து நகைச்சுவை சேர்த்து அப்துல் கலாமைச் சாடிக்கொண்டிருந்தார். அப்துல் கலாம் போராடிக்கொண்டிருக்கும் மக்களை சந்திக்காதது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருந்தது. அடுத்து ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர் மிக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அதை அடுத்து இரு பெண்கள் சினிமாப் பாடல் மெட்டிலமைந்த போராட்டப் பாடல் ஒன்றை பாடினார்கள். கொஞ்சம் அணு, கொஞ்சம் அரசியல் கலந்த பாடலது. அந்த நேரம் பள்ளி விட்டு குழந்தைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
பின்பு என்னைப் பேசச் சொன்னார்கள். அணு ஆபத்து குறித்து முதலில் பேசியவர் சொன்ன சிலவற்றை அழுத்திச் சொன்னேன். கடந்த பல மாதங்களாக பலதரப்பட்ட கருத்துகளை அவர்கள் கேட்டிருக்கக்கூடும். இருந்தும் அவர்கள் ஈடுபாட்டோடு கவனித்துக்கொண்டிருந்தது வியப்பாயிருந்தது. எவனாவது ஒருவன் நல்ல செய்தியைச் சொல்லமாட்டானா என்கிற ஏக்கம் காரணமாக இருக்கக்கூடும்!
டிஎன்ஏ என்பது கடவுளின் கையெழுத்து அல்லது வரைபடம் என்றும் அதை சிதைக்கும் கதிரியக்க ஆபத்து குறித்தும் ஓரிரு வரிகள் சொன்னேன். உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றபோது கூட்டத்திலிருந்த ஒரு வயதான பெண்மணி வானம் நோக்கி கடவுளை வணங்கி வேண்டிக்கொண்டார்.
அடுத்து இரு சிறுமிகள் திரைப்பாடல் மெட்டில் அணு உலை எதிர்ப்புப் பாடல் பாடினார்கள். தொடர்ந்து அந்தச் சிறுமிகளே சத்தமாக கோஷங்களை எழுப்ப கூட்டம் பதிலுரைத்தது. குஜராத்திலிருந்து சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் மக்களைச் சந்திக்க வருவதாகவும் ஊர் மக்கள் அதில் கலந்துகொள்ள வரவேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் ஒருவர் ஒருவராக கோயிலை நோக்கி வர ஆரம்பித்தனர். கொஞ்சம் கழித்து நான் விடைபெற்றுக்கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை, இது இந்தியர்கள் எல்லோருக்குமான போராட்டம். அண்மையில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்றது இது. மக்களை அசட்டை செய்துவிட்டு, திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கும் அரசின் எதேச்சதிகாரத்துக்கு எதிரான போராட்டம் இது. இந்த எளிய மக்களை நோக்கி ஆயிரம் கேள்விகளைக் கேட்கும் பலதரப்பட்ட மக்களும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி ஒன்றிருக்கிறது. இந்தத் திட்டம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டதா? இல்லை எனில் ஏன்?
ஒரு மாநிலத்தின் தேவைக்கு ஒருசில ஊர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள் தாராளமாக அணு உலைகளை ஆதரிக்கலாம். நாளை அரசாங்கம் உங்கள் வீட்டுக் கதவையும் இரும்புக் கரத்தால் தட்டும். தட்டத்தான் போகிறது. அதுவரை இவர்கள் வலி புரியப்போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக