ஞாயிறு, 13 நவம்பர், 2011

ரத்த வெள்ளத்திலே தான் மிதந்து கொண்டிருந்தார்; விரல்கள் துண்டிக்கப்பட்டி கிடந்தன... : கலைஞர் பேச்சு

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அவரது உரையின் விவரம்:மூத்த வழக்கறிஞர் தம்பி சண்முக சுந்தரம், சரோஜினி சண்முகசுந்தரம் ஆகியோரின் மகன் மனுராஜ்க்கும், . குமார், மினி ஆகியோரின் மகள், ருக்மிணிக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்துவதில் - இந்த விழாவிற்கு தலைமையேற்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன், பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சண்முக சுந்தரத்தைப் பொறுத்தவரையில் அவர் வழக்கறிஞர் மாத்திரமல்ல, இந்தக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கக் கூடியவர்.
இதை நான் சொல்வதற்குக் காரணம், நம்முடைய கழகத்தின் வழக்குகளை யெல்லாம் நேர் நின்று, எதிர் கொண்டு நடத்துகிறார் என்பதற்காக அல்ல, நான் எழுதி வெளி வந்துள்ள “நெஞ்சுக்கு நீதி” என்ற என்னுடைய வரலாற்றில் நான்காவது பாகத்தில்,

சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றி - அவருடைய குடும்பத்தைப் பற்றி - அவருடைய அருமைத் தந்தையாரைப் பற்றி நான் கோடிட்டுக் காட்டியுள்ள செய்திகளை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நான்காவது பாகத்தில் - “நெஞ்சுக்கு நீதி”யில் - “டான்சி நிலம் வாங்கியது தொடர்பாக வழக்கு நடத்த ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் 30-5-1995 அன்று இரவு அ.தி.மு.க. குண்டர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்.
அந்த வழக்கு பற்றி ஆலந்தூர் பாரதி அன்று மாலையில் தான் சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு வந்து விவாதித்து விட்டுச் சென்ற பிறகு, இந்தக் குண்டர்கள் அங்கே வந்து “யார் மேலடா கேஸ் போடற?” என்று கேட்டவாறே சண்முகசுந்தரத்தைத் தாக்கி யிருக்கிறார்கள்.
அவர் வயது காரணமாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாகவும் உயிர் தப்பிப் பிழைத்தார். உயிர் பிழைத்த பிறகும், அவர் அதற்கு முன்பு கழக வழக்கறிஞராக ஆற்றிய பணியில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து மேலும் உறுதியாக கழக சார்பான வழக்குகளை நடத்தி வந்தார்.

அவர் அன்று சிந்திய ரத்தத்திற்கு கழகம் காட்டிய நன்றிக் கடனாகத் தான் கழக ஆட்சியில் அரசு வழக்கறிஞராகவும், அதன் பின்னர் மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றிடும் அரிய வாய்ப்பினை பெற்றார். சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களை, வழக்கறிஞர்கள் எல்லாம் சந்தித்து மனு கொடுத்தார்கள்.
மாநிலங்களவையில் தம்பி முரசொலி மாறன், சண்முக சுந்தரம் தாக்கப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்றும், அந்தச் சம்பவத்திற்கு தமிழக ஆளுங்கட்சியே காரணம் என்றும் குற்றஞ்சாட்டி பேசினார்கள்.

2-6-1995 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவிலும் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
ஒரு வார இதழில் பின்வருமாறு தலையங்கம் எழுதினார்கள். “சென்னை நகரில் வன்முறைக் கும்பல்கள் இப்படித் தாக்குதல் நடத்துவதும், போலீஸ் கையைப் பிசைந்தபடி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நிற்கும் வெட்கம் கெட்ட காட்சியும் புதிதல்ல. இந்தத் தாக்குதலின் பின்னால் ஏதோ வஞ்சகமான மர்மங்கள் இருப்பது போல மக்களே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் போலீஸ் மீது இருக்க வேண்டிய மரியாதை இன்னும் அதல பாதாளத்துக்கு இறங்கி யிருக்கிறது. சண்முகசுந்தரம் மீது விழுந்த வெட்டுகள், உண்மையில் ஜனநாயகத்தின் வேர் மீது விழுந்த வெட்டுகள். இதை உணராதவரை காவல் துறையினர் தங்கள் காக்கிச் சட்டையைக் கழற்றி எறிந்து விடுவது தான் மேலானது ” என்று வார இதழ் தலையங்கம் எழுதியது.
சென்னை உயர் நீதி மன்றத்தில் 20-6-1995 அன்று நீதிபதி ஜெகதீசன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், நான்கு மாதங்களுக்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு அனைத்து உதவிகளும் அளித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், சண்முகசுந்தரத்திற்கு ஆகும் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் அன்றைக்கு நீதி மன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்றைக்கிருந்த அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதி மன்ற நீதிபதி, சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டு சென்னை உயர் நீதி மன்றம் அளித்திருந்த தீர்ப்பை அங்கீகரித்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.” அப்பொழுதே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை என்று அன்றைய - மன்னிக்கவும் - இன்றைய ஆளுந்தரப்பினர் உச்ச நீதி மன்றத்திற்குச் சென்றார்கள்.

அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி உச்ச நீதி மன்றத்தினுடைய முடிவின்படி சண்முகசுந்தரத்திற்கு நீதி உண்மையிலேயே வழங்கப்பட்டது. அதன் காரணமாகத் தான் சி.பி.ஐ. அந்த வழக்கை விசாரித்து - அந்த வழக்கிலே குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்கக் கூடிய சூழ்நிலை உருவாயிற்று என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏறத்தாழ ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள். நானும் என்னுடைய தம்பிமார்கள், கழகத்தினுடைய ஆர்வலர்களும் சென்று மருத்துவ மனையிலே சண்முகசுந்தரத்தைப் பார்த்த போது ரத்த வெள்ளத்திலே தான் மிதந்து கொண்டிருந்தார்.
எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல், அவருடைய விரல்கள் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன. அவருடைய உற்றார் உறவினர், இல்லத்தார் இவர்களுக்கெல்லாம் நான் ஆறுதல் சொல்லி விட்டு, அதற்கு மேல் அமைதிக்கு பங்கம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தமிழகத்தில் நடந்த இந்தத் தகாதச் செயலை தட்டிக் கேட்க மக்கள் தான் முன் வர வேண்டுமென்று அறிக்கை விடுத்து விட்டு நான் என்னுடைய கடமையை ஆற்றச் சென்றேன். அதன் பிறகு சண்முகசுந்தரம் அஞ்சி நடுங்கி விட்டாரா, பதுங்கி விட்டாரா
அவருடைய ஆற்றலை வெளிப்படுத்த தவறி விட்டாரா என்றால் இல்லை. தொடர்ந்து இந்த இயக்கத்திற்காக ஆற்றி வருகின்ற பணியை தங்கு தடையில்லாமல் ஆற்றி, இன்று வரை இயக்கப் பணியினை, தன்னுடைய வழக்கறிஞர் பொறுப்பை அன்றைக்கு எப்படி நிறைவேற்றினாரோ அப்படி நிறைவேற்றுகின்ற வகையில் இன்றைக்கும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அநீதி தலை விரித்தாடுவதை இன்றைய காலக் கட்டத்திலே கூட, அராஜகம் பொங்கியெழுந்து - அதைப்பற்றி யாருமே கேட்க முடியாத சூழ்நிலையிலே ஒரு வழக்கு போட்டால் போதாது என்று, அரசியல் வாதிகளின் மீது மூன்று வழக்கு, நான்கு வழக்கு, ஐந்து வழக்கு - எல்லா சட்டப் பிரிவுகளின் மீதும் - இருக்கின்ற பிரிவுகள் எல்லாம் போதாதென்று, குண்டர் சட்டப் பிரிவுகளிலும் வழக்குகளைப் போடுகின்ற இந்த அரசு நடைபெறுகின்ற காலக் கட்டத்தில் சண்முகசுந்தரம் போன்றவர்களின் ஆற்றல் எந்த அளவிற்கு தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.அப்படி உணர்ந்த காரணத்தால் தான் அன்றைக்கே அவர் புரிந்த தியாகத்திற்கு மதிப்பளித்து நன்றி செலுத்துவது கடமை, இந்த இயக்கம் அவருக்கு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு அடையாளமாக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி - அவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி போன்றவைகள் எல்லாம் அப்போதே வழங்கப்பட்டது.

இதெல்லாம் தியாகத்திற்குப் பரிசாக அல்ல, தியாகத்தை மதிப்பதற்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடனாக அன்றைக்கு ஆற்றியவை. இன்றைக்கும் நான் சொல்லுகிறேன். அப்போது யாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தருவது என்ற கேள்வி எழுந்த போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஜின்னா என்ற நண்பருக்கு வழங்கலாம் என்று ஒரு சாரார் - சண்முகசுந்தரத்திற்குத் தான் வழங்க வேண்டுமென்று இன்னொரு சாரார் - கருத்துக்களைச் சொன்ன போது - தம்பி ஜின்னாவே முன் வந்து, எனக்குத் தேவையில்லை, இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்த சண்முக சுந்தரத்திற்குத் தான் நீங்கள் அதை வழங்க வேண்டுமென்று சொல்லி, அப்போது அதை வழங்கச் செய்தார்.
 ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதை நான் மனதிலே வைத்துக் கொண்டு - சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்படியொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கழகத்திற்கு கிடைக்கக் கூடிய நிலை வந்த போது, நான் பழையதை நினைவிலே வைத்துக் கொண்டு, தம்பி ஜின்னாவை அழைத்து, அப்போது நீ வேண்டாமென்று கூறி, சண்முகசுந்தரத்திற்கு வழங்கலாம் என்று சொன்னாயே, அந்த தியாகத்திற்காக இப்போது உனக்கே அந்தப் பதவியை வழங்குகிறேன் என்று கூறி ஜின்னாவிற்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.
இந்தப் பண்பாட்டை ஏன் எடுத்துச் சொல்கிறேன் என்றால், இது கடந்த காலச் சரித்திரம் மாத்திரமல்ல, நம்முடைய இயக்கத்தின் நிகழ்கால சரித்திரமாகவும் எதிர்காலச் சரித்திரமாகவும் இருக்க வேண்டுமென்பதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் - மன்னிக்க வேண்டும் - இடித்துச் சொல்வதற்காகத் தான் இதைக் குறிப்பிடுகிறேனே அல்லாமல் வேறல்ல. இப்படி இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டு - அவர் அப்படி ஒப்படைத்துக் கொண்டதற்குக் காரணம் - அந்தக் குடும்பமே அப்படிப்பட்ட குடும்பம்.

இங்கே பேசிய சிலர் குறிப்பிட்டதைப் போல், அவருடைய தந்தையார் திராவிட இயக்கத்திலே பற்றும் பாசமும் கொண்டவர்.
தம்பி சண்முகசுந்தரத்தின் இல்லத்தில் நடைபெறகின்ற இந்த மணவிழாவில் மணமகனாக வீற்றிருப்பவர் மனு. அந்த மனு, இங்கே வாழ்த்துக் கடிதம் படித்தார்களே, அந்த வாழ்த்துச் செய்தியை எழுதி அனுப்பிய என் அன்பு மகள் கனிமொழியிடத்திலே கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றி, துணை நின்று இன்றைக்கும் திகார் சிறையிலேயிருந்து கனிமொழியின் சார்பாக எனக்கு செய்திகளை அனுப்பு கின்றவராக விளங்குகிறார்.

அந்த குடும்பத்தின் தொடர்பு அன்று முதல் இன்று வரை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையெல்லாம் எண்ணிப் பார்ப்பதற்காகத் தான் நான் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்குச் சொன்னேன் என்பதைக் கூறிக் கொண்டு  மணமக்களாக வீற்றிருக்கின்ற மனுராஜூவும், ருக்மிணியும் எல்லா வல்ல பெருவாழ்வு வாழ்ந்து - திருவாழ்வாக அதை நடத்தி - நம்முடைய உள்ளங்களை யெல்லாம் மகிழ்ச்சிப் பெருக்கிலே ஆழ்த்த வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்க மணமக்கள் என்று கூறி விடை பெறுகிறேன்’’

கருத்துகள் இல்லை: