செவ்வாய், 15 நவம்பர், 2011

2-வது நாள் விசாரணையில், மிக ரிலாக்ஸ்டாக கனிமொழி

ViruvirupuNew Delhi, India: The second day of the 2G trial at CBI special court started with less noisy courtroom. The only woman accused in the case, Kanimozhi, daughter of DMK chief Karunanidhi, looked very relaxed in court, while she chatted with her husband and her lawyer.
இன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் 2-ம் நாள். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய விசாரணை, வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று ஆரம்பித்தபோது, கோர்ட் ரூம் முதல் நாள் இருந்த அளவுக்கு இரைச்சல் கிடையாது. வெள்ளிக் கிழமை காணப்பட்டது போல, கூட்ட நெரிசலும் மோசமாக இல்லை.இன்று வக்கீல்களும், சாட்சியும் பேசுவதை தெளிவாகக் கேட்டக்கூடியதாக இருந்தது.
வழக்கின் பிரதான குற்றவாளி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் ஏனோ  தெரியவில்லை, கோர்ட்டில் எல்லாத் திசையிலும் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தார்.
2-வது நாளான இன்றும், சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பை மறுத்தார். விசாரணையின 1-வது நாள் (வெள்ளிக்கிழமை) குறுக்கு விசாரணை வாய்ப்பை பகிஷ்கரிக்க போவதாக அவர் எடுத்த முடிவிலேயே இன்றும் உறுதியாக இருப்பதாக அவரது வக்கீல், நீதிபதியிடம் தெரிவித்தார்.

விசாரணை முழுமையாக முடியும் முன், வழக்கு நடைபெறுகின்றது என்பதே அவரது ஸ்டான்ட். பின்னாட்களில் இந்த வழக்கின் அப்பீலுக்கு அவரது ஸ்டான்ட் உபயோகமாக இருக்கலாம். ராசாவின் மனைவியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
ஊழல் வழக்கின் குற்றவாளிப் பட்டியலில் உள்ள ஒரேயொரு பெண்ணான கனிமொழி, இன்று கோர்ட்டுக்கு வந்தபோதே மிகவும் ரிலாக்ஸ்டாக காணப்பட்டார். வழக்கு விசாரணையின் ஆரம்பக் கட்டம் இது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எவ்வாறு முறைகேடாக நடாத்தப்பட்டது என்ற திசையில் விசாரணை நடப்பதால், கனிமொழி தொடர்பான பகுதிகள் வழக்கின் ஆரம்ப நாட்களில் வராது.
அதனால்தான் அவர் ரிலாக்ஸ்டாக இருந்திருக்கலாம்.
கனிமொழியின் கையில் Mystic Musings என்ற புத்தகம் காணப்பட்டது. சற்குரு ஜாகி வாசுதேவ் எழுதிய, தியானம் பற்றிய புத்தகம் அது. இடையே சிறிது நேரம் ஆ.ராசாவும் அந்த புத்தகத்தை வாங்கி சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு கொடுத்தார். கோர்ட் முடிந்து மீண்டும் சிறைக்கு போகும்போது கனிமொழியிடம் கொடுத்து விடுவதற்காக பல சஞ்சிகைகளை அவரது கணவர் வாங்கி வந்திருந்தார்.
கனிமொழி ஜாமீன் மனு எடுத்துக் கொள்ளப்பட்ட தினத்தில் வந்தது போல தி.மு.க.வினர் அதிகளவில் இன்று வரவில்லை. இதனால் பெரிதாக இடையூறுகள் ஏதுமின்றி கணவருடன் பேசியபடி அமர்ந்திருந்தார் கனிமொழி.
கனிமொழியின் வக்கீல்களில் ஒருவர், “ஹைகோர்ட் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்யவில்லை. அதனால் இன்னமும் சான்ஸ் இருக்கின்றது. சி.பி.ஐ. கொடுக்கப்போகும் ரிப்போர்ட்டை வைத்துத்தான் ஹைகோர்ட் ஜட்ஜ் முடிவு எடுப்பார்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
“வழக்கு விசாரணை தொடங்கிவிட்டதே.. இனியும் ஜாமீன் கொடுப்பார்களா?” என்று கனிமொழி யோசனையுடன் கேட்டார்.
“கொடுக்க முடியும். தினமும் விசாரணை நடக்கும் நேரத்துக்கு கோர்ட்டுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கொடுக்க முடியும். முன்பு வேறு சில கேஸ்களில் அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் அந்த வக்கீல்.
வழக்கின் 2-வது நாள் ரிலையன்ஸ் குருப் தலைவர் ஏ.என்.சேதுராமனின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை மிகமிக மொதுவாகவே நடைபெற்றது. அவரது சாட்சியம் முடிந்தபின், எதிர்த்தரப்பு வக்கீல்கள் முழுமையாக குறுக்கு விசாரணை செய்வததற்கு நேரம் போதாமையால், விசாரணை மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடரும் என ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: