செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்

நியூயார்க்: "இந்தியாவின் ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வெளிவரும் பொறியாளர்களின் தரம், குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அந்நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான முறைகளை சரி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது' என்று, "இன்போசிஸ்' தலைவர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், பெருமளவில் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது: ஐ.ஐ.டி.,க்களில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களின் கல்வித் தரம், பல ஆண்டுகளாகவே குறைந்து கொண்டே வருகிறது. இந்தப் படிப்புகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி வகுப்புகளில், சில குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது பற்றிய பயிற்சிகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதனால் எப்படியாவது நுழைவுத் தேர்வு மூலம் ஐ.ஐ.டி.,க்குள் நுழையும் மாணவர்கள், உலகளவில் வேலைகளுக்குச் செல்லும் போதும், அமெரிக்காவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் போதும் திணறுகின்றனர்.
அதாவது, 20 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கள் தரத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர். மீதமுள்ள 80 சதவீதம் பேர்களின் தரம் குறைவாகவே உள்ளது. இது சரி செய்யப்பட வேண்டும். மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நம் ஐ.ஐ.டி.,க்கள் வெறும் படிப்பு சொல்லித் தரும் நிறுவனங்களாக மட்டும் இயங்காமல், ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., போன்று ஆய்வுகளைக் கற்றுத் தரும் நிறுவனங்களாக மாற வேண்டும். நல்ல ஆய்வுகளுக்கு நிதியளிக்கும் அமைப்புகளை உருவாக்கும்படி, இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: