வியாழன், 6 அக்டோபர், 2011

எண்ணெய் வளத்தை தடுக்கவே புலிகளை நோர்வே ஆதரித்தது

எண்ணெய் வளத்தையும் வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதைத் தடுத்து நிறுத்தவே நோர்வே புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த குற்றஞ்சாட்டியுள்ளார். போரை முடிபுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப்படுத்திருக்க முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் 3 வருடங் களில் மின் உற்பத்திக்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தமுடியும். முதலாவது எண்ணெய்க் கிணறு மூலம் ஹைட்ரோ காபன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது.
இவ்வாயுவைக் கடல் மட்டத்திற்கு மேல் கொண்டுவந்தால் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும். அதன்மூலம் மிகக் குறைந்த செலவுடன் மின்னுற்பத்தியை மேற்கொள்ள முடியும். கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரி வாயு அல்ல. இந்த இயற்கை எரிவாயுவைத் திரவ நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இத்திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின் உற்பத்தித் தேவையில் 30 வீதத்தைப் பூர்த்தி செய்கின்றன. கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 354 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை ஓரிரு நாட்களில் வெளியே கொண்டுவந்து விடமுடியாது. கடல் மட்டத்தில் தளம் அமைத்து எரிவாயுவைத் திரவநிலைக்கு மாற்ற வேண்டும். இதற்காக வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பத்தைப் பெறவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: