சனி, 8 அக்டோபர், 2011

கிறீஸ் பூதம் பழகிவிட்டதா?அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் போர் நிறைவடைந்து அமைதிச் சூழல் திரும்பியிருக்கின்ற நிலையில் சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும்-டக்ளஸ் தேவாநந்தா!

நாட்டில் போர் நிறைவடைந்து அமைதிச் சூழல் திரும்பியிருக்கின்ற நிலையில், சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும் என்று, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக யாழ் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு அங்கு தெரிவித்தார்.

'இது யுத்த காலம் அல்ல. எனவே சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்படவேண்டும். அதற்கான உத்தரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார். இந்தப் பிரதேசத்தில் அதிகம் இருக்கும் ஒரு அமைச்சர் என்ற வகையில் உரிய முறையில் சிவில் நிர்வாகத்தை இங்கே ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு' என்றார் அவர்.யாழ் அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸமா அதிபர் நீல் தளுவத்த யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நிமல் லியுகே மற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேசசபைகளின் செயலாளர்கள் வலயக் கல்வி அதிகாரிகள் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்த இந்தக் கூட்டம் ஒரு முதல் வெற்றி என்று இங்கு குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடுத்து வரும் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பான திட்டங்கள் பற்றி ஆராயப்படும் என்று குறிப்பிட்டார்.

கிறீஸ் பூதம் பழகிவிட்டதா?
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் கிறீஸ் பூதம் பற்றி அதிகம் பேசப்பட்டது என்பதை இங்கு ஞாபகப்படுத்திப் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப்போதும் அந்தப் பிரச்சினை தொடர்கிறதா என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் கேட்டார். இதற்கு எவரும் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில்'இரண்டு வருடம் ஒருவருக்கு கஷ்டகாலம் என்று சாத்திரம் சொன்ன ஒரு சாத்திரியார் அதன்பின்னர் என்ன நடக்கும் என்று கேட்டபோது பிறகு அதுவே பழகிப்போய்விடும் என்று கூறியதுபோல் உங்களுக்கு கிறீஸ் பூதமும் பழகிப்போய்விட்டதா?' என்று நகைச்சுவையாகக் கேட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் 'கிறீஸ் பூதம் என்ற ஒன்று உண்மையில் கிடையாது. சில சமூகவிரோத சக்திகளே அவ்வாறான பிரச்சினைகளைத் தோற்றுவித்தனர். இப்படியான ஒரு பிரச்சினை இருப்பதாகத் தெரிந்தும் அது தொடர்வதற்கு அரசாங்கம் இடமளிக்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டார்.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள்
சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பான முயற்சிகள் குறித்து இங்கு கேள்வியெழுப்பிய பிரதேச செயலாளர்கள் பாதுபாப்புக்குழு உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு இருநூறு ரூபா அறவிடப்படுவது மற்றும் இதற்காக நிரப்பப்படவேண்டிய படிவங்கள் சிங்களத்தில் காணப்படுவது போன்றவற்றால் குழப்பமான நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர்களின் இந்தச் சந்தேகத்துக்கு பொலிஸ் தரப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டது. இருநூறு ரூபா செலுத்துவதற்கு வசதியில்லாதவர்களுக்கு உதவுவதற்கு அமைச்சர் ஏதேனும் நிதியுதவி செய்யவேண்டும் என்று பொலிஸ் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அதற்கான ஏற்பாட்டைச் செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு தெரிவித்தார்.

இதுதொடர்பான பிரதேச செயலாளர்களின் கேள்விகள் மற்றும் அதற்கான பொலிஸ் தரப்பு பதில்களின்போது எழுந்த சில புரிந்துணர்வற்ற தன்மைகளால் கூட்டத்தில் சிறிதளவு குழப்பமும் சந்தேகமும் எழுந்தது. எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பொலிஸ் தரப்பில் இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்களில் தயக்கமின்றி கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ் மொழியில் உரிய படிவங்கள் வழங்கப்படாவிட்டால் அதுபற்றிக் கேட்பது மக்களுடைய உரிமை என்றும், அதற்கு சட்டத்திலேயே இடமுண்டு என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தக் கலந்துரையாடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய சில தப்பான புரிந்துணர்வுகளுக்காக அமைச்சர் என்ற வகையில் தாம் மன்னிப்புக்கோருவதாகவும் கூறினார்.

சிவில் பாதுகாப்புக்குழு எந்தச் சட்டத்தின்கீழ்?
இதேவேளை, சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக கிராமசேவையாளர்கள் ஊடாக படிவங்கள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், எந்தச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விளக்கம் தமக்குத் தேவைப்படுவதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் பொலிஸாரிடம் கேட்டார்.

கிராமசேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் அரசாங்க அதிபர் என்ற வகையில் தாம் பதில்கூறக் கடமைப்பட்டவர் என்று குறிப்பிட்ட அவர், அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதால், சிவில் பாதுகாப்புக்குழுக்கள் தொடர்பான செயற்றிட்டங்கள் எந்தச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்று தெளிவுபடுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பொலிஸார், பொலிஸ் சட்டத்தின் 76வது பிரிவின் கீழேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இது நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் ஒரு சிவில் சட்டம் என்றும் சுட்டிக்காட்டினர்.

இது அவசரகாலச் சட்டத்தின் கீழான ஏற்பாடு அல்ல என்றும், சாதாரண இந்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கு நாட்டில் வாழும் எந்தவொரு குடும்பமும் தமது விபரங்களை வழங்க முன்வரவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: