வெள்ளி, 3 ஜூன், 2011

Vadivelu:அம்மாவைத் திட்ட வேண்டாம் எனச் சொன்னதே கலைஞர்தான்


தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு. ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!
''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''
''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''
''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''
''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க. 'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்த ரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம். வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன். அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்? வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''
''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங் களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''
''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன். நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''
''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''
''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''
''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''
'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார். அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?
தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா? 'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க. அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''
''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''
''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன். பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''
''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''
''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க. நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''
'' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''
''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க? கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது? எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''
''அரசியலில் அடுத்த கட்டம்?''
''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!

கருத்துகள் இல்லை: