திங்கள், 30 மே, 2011

தயாநிதி மாறனின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் சாத்தியக் கூறுகள்

தயாநிதி மாறன் சோனியா காந்தியை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய புடவைத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்திருப்பது டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கனிமொழியை கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்தார்.
டில்லியில் தங்கியிருந்த அவரை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பாரூக் அப்துல்லா, வி.நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் சந்தித்தனர். கனிமொழியைச் சந்தித்த கருணாநிதி ஒரு நாள் டில்லியில் தங்கியிருந்த போதும் மரியாதை நிமித்தமாகக் கூட காங்கிரஸ் தலைவரைச் சந்திக்காதது குறித்து சென்னையில் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு கருணாநிதி என் மகள் கனிமொழி சிறையில் இருப்பதால் இந்தத் தருணத்தில் அவரைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.மேலும் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ.தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதில் தமிழகத்திலிருந்து மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
ஆ.ராசாவைத் தொடர்ந்து அவருக்கு முன்னதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.வின் சார்பாக இதுவரை டில்லி பணிகளை கட்சிப் பாராளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று தற்போது சந்தித்திருப்பது தலைமையின் ஒப்புதலுடன் நடைபெற்று இருக்குமா என்பது போன்ற கேள்விகள் டில்லி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது அதில் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் இருந்தார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு மத்திய அரசுடனும் காங்கிரஸ் தலைமையுடனும் தி.மு.க. வின் அதிகாரப் பூர்வத் தூதராக செயல்பட்டது தயாநிதி மாறன் தான்.அவரது அமைச்சர் பதவியை தி.மு.க.தலைமை பறித்த பிறகு அவர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போதுதான் தயாநிதி மாறனை மத்திய இரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியுடனும் காங்கிரஸ் தலைமையுடனும் சமரசம் பேச தி.மு.க. அதிகாரபூர்வமாக ஈடுபடுத்தியது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது அமைச்சகம் முழு சுதந்திரத்துடன் முடிவெடுக்க உரிமை வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுக்க உரிமை கோரியதாகக் கூறப்படுகிறது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் 1999 ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. இத்தகைய சூழலில் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. தலைமையின் ஒப்புதலுடன் தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தாரா இல்லை தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.தயாநிதி மாறன் சோனியா காந்தி சந்திப்பின் போது தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிப்பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: