செவ்வாய், 31 மே, 2011

டாக்டர் சீட் கேட்டு, 22 ஆயிரம் பேர் : பி.இ., 1.7 லட்சம்

சென்னை : மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களும், மருத்துவ படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு, கடந்த, 16ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அதிகமான மாணவர்கள் மதிப்பெண்களை குவித்ததால், தொழிற்கல்வி படிப்புகளில் சேர, தீவிர ஆர்வம் காட்டினர். குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த, 28ம் தேதி நிலவரப்படி, பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 172 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.மருத்துவப் படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசி நாளான இன்று, ஏராளமான மாணவர்கள் விண்ணப்பம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலில், ஜூன் கடைசி வாரத்தில் இருந்தோ அல்லது ஜூலை முதல் வாரத்தில் இருந்தோ துவங்கும் என, கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங், சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய நான்கு இடங்களில்நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும், இது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இது தொடர்பான அறிவிப்புகள், கவர்னர் உரையில் வெளியிடப்படலாம் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள்ளாகவும், பொறியியல் படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 3ம் தேதிக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

kunjumani - Chennai ,இந்தியா2011-05-31 03:11:41 IST Report Abuse
எதுக்கப்பா கஷ்டப்பட்டு படிச்சுகிட்டு ? நாக்கையோ மூக்கையோ அறுத்துகிட்டா அ.தி.மு.க ஆட்சியில் வேலை தானாகிடைக்கும்
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-05-31 02:11:35 IST Report Abuse
மருத்துவ படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. பொறியியல் படிப்பில், அப்படி என்ன தான் இருக்கிறது?
 

கருத்துகள் இல்லை: