செவ்வாய், 21 ஜூன், 2011

பாரதிராஜா மீண்டும் தலைவரானார்.இயக்குநர் சங்கத் தேர்தல்

சென்னை, ஜூன். 20: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக அமீர் வெற்றி பெற்றுள்ளார்.  இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே தலைவராக இருந்த பாரதிராஜாவின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  இதில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரின் அணியில் செயலாளர் பதவிக்கு அமீர் போட்டியிட்டார். பாரதிராஜாவை எதிர்த்து உதவி இயக்குநர் முரளி என்பவர் போட்டியிட்டார்.  பாரதிராஜா அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட சேரன், சமுத்திரக்கனி, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பாரதிராஜாவுக்கு 1003 வாக்குகள்:  ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 1279 வாக்குகள் பதிவானது. திங்கள்கிழமை காலை வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் பிற்பகலில் அறிவிக்கப்பட்டன. பாரதிராஜா 1003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அமீர் பெற்ற வாக்குகள் 901. துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பிரபுசாலமன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, தம்பிதுரை, வேல்முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் இன்னும் ஒரிரு நாள்களில் பதவி ஏற்கிறார்கள்

கருத்துகள் இல்லை: