செவ்வாய், 21 ஜூன், 2011

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.
வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!
சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.
வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

பங்காரு அடிகளார்கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.
பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.
பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.

ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும்  ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். 

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.
ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.
“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

வாழ்வின் நெருக்கடி சாமியார்களின் வளர்ச்சிப்படி

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்கள் துணை நடிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்குத்தான் வெள்ளித்திரையின் கடாட்சம் கிடைக்கும்.
எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது.

நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது…… என முடிவேயில்லாமல் அலைக்கழிக்கிறது வாழ்க்கை என்ற இந்த நச்சுச் சுழல். வாழ்வின் பிரச்சினை சிந்தனையில் சீர் குலைந்து, உடல் நலிவாய் வெளிப்பட்டு,

என்னை மீட்பார் யாருமில்லையா’ என்று புலம்புகிறது, குமுறுகிறது, அழுகிறது, வெடிக்கிறது, சில வேளை தற்கொலையிலோ, வேறு வகை வன்முறைகளிலோ முடிகிறது.
இருப்பினும் ஆகப் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலிலிருந்து சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து கடைத்தேறிவிட முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீக ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. நடப்பில் சாதாரணமாகவும், கனவில் அசாதாரணமாகவும் வாழும் நடுத்தர வர்க்கம் இந்த ஆன்மீகச் சந்தையின் வலையில் சிக்கிக் கொள்வதற்குக் காத்திருக்கிறது. தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்ளும் திறமை மட்டுமே ஆன்மீகவாதிகளுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனிநபர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்ட வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை: