வெள்ளி, 24 ஜூன், 2011

ஏன் ஜெயித்தோம்?ADMK .ஏன் தோற்றோம்?’ DMK

கடந்த முறை உன் ஆட்சியில் போடப்பட்ட மேம்பால வழக்கு என்னாச்சு?

எத்தனை விசாரணை கமிஷன்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். நாங்கள் பார்க்​காத விசாரணை கமிஷனா? பார்க்காத சர்க்காரியா கமிஷனா? கடந்த முறை உன் ஆட்சியில் போடப்பட்ட மேம்பால வழக்கு என்னாச்சு? இந்த முறையும் முடிந்தால், பொய் வழக்கைப் போடு பார்க்கலாம்...'' - அடிவயிற்றில் இருந்து ஸ்டாலின் குரல் கொடுக்கவும், எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது தொண்டர் கூட்டம். கோவையில் நடந்த தி.மு.க-வின் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் தீர்மானங்களை விளக்கும் பொதுக் கூட்டத்தில்தான் இப்படி ஓர் ஆவேசம்!

முதலில் பேசிய கோவை மு.ராம​நாதன், ''நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், 'ஏன் ஜெயித்தோம்?’ என்று ஜெயித்தவர்களுக்கும் தெரியவில்லை... 'ஏன் தோற்றோம்?’ என்று தோற்றவர்​களுக்கும் தெரியவில்லை. 233தொகுதிகளிலும் நம் கூட்டணிக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தா​லும், கொளத்தூரில் நீங்கள் வென்று​விட்டீர்கள். ஆனால், கோயம்​புத்தூரில் நாங்கள் தோற்றுவிட்டோம். எங்களை மன்னியுங்கள்...'' என்று ஸ்டாலினை நெகிழவைத்தார். ஸ்டா லினுக்கு உடல்நிலை சரி இல்லாததால், மளமள​வென நிகழ்ந்த இந்தக் கூட்டத்​தில், அடுத்து எழுந்த மு.கண்​ணப்பன் நீட்டி முழக்க... தொண்டர்கள் கடுப்பாகி கை தட்டியே அவரை அமர​வைத்து​விட்டனர்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ''ஓர் அமைச்சராக, துணை முதல்வராக கோவைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முறை வந்திருக்கிறேன். அப்போது எல்லாம் இல்லாத ஓர் ஆனந்தம், கழகத்தின் பொரு ளாளர் என்ற முறையில் இன்று ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு முன் பேசியவர்கள் தோல்வியைக் குறித்துப் பேசினார்கள். அவர் களுக்குச் சொல்கிறேன்... நீங்கள் வருந்தும் வகையில் நம் கழகம் கரைந்துவிடவில்லை. ஆட்சி அதிகாரத்தில் நம்மை அமர்த்திய கடந்த தேர்தலில் நாம் பெற்ற வாக்கு களுக்கும், இந்தத் தேர்தலில் நாம் பெற்றிருக்கும் வாக்குகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இடைவெளியை கூடிய விரைவில் நிரப்பி விடலாம், கவலை வேண்டாம். தோல்வியைக் கண்டு வெட்கப்படுபவர்களா நாம்? தி.மு.க. அளவுக்கு வெற்றியை சுவைத்த, அதே அளவுக்குத் தோல்வியையும் தோளில் தாங்கிய வேறு ஒரு கட்சியை இந்த நாட்டில் காட்டுங்கள் பார்க்கலாம்? இன்று நம்மால் எதிர்க் கட்சி இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் நாம் எதிர்க் கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் நிச்சயம் சிறப்பான எதிர்க் கட்சியாக செயல்படுவோம்.

'தலைவருக்கு மக்கள் ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்’ என்று நம்மவர்களே சிலர் ஆசுவாசப்பட்டுச் சொல்கிறார்கள். நானும் சொல்கிறேன். சுமார் 50 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய மக்கள் நலப் பணிகளை, வெறும் ஐந்தே ஆண்டுகளில் சுழன்று சுழன்று செய்து முடித்த நம் தலைவருக்குச் சிறிய ஓய்வு தேவைதான். ஆனால், அவர்தான் ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் ஆயிற்றே! அதனால்தான், 'பொது நல விஷயங்களில் சின்னப் பிரச்னை நேர்ந்தாலும், அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்ப வேண்டும்’ என்று எங்களை உசுப்பி இருக்கிறார். அதன் விளைவாகத்தான் ஏதோ ஆளும் கட்சிக் கூட்டம் நடத்துவதுபோல், இவ்வளவு பிரமாண்டமாக இங்கே கூடி நின்று கூட்டம் நடத்துகிறோம்.

தலைவர் சொல்லியதுபோலவே, பொது நலப் பணி களுக்கு ஜெயலலிதாவால் கடும் இன்னல் காலம் ஆரம்பமாகிவிட்டது. முதல் சாதனையாக 'சமச்சீர் கல்வி ரத்து’ என்ற உத்தரவைப் போட்டு, பெற்றோர்களின் தலையில் அடித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் அவர் திருந்தவில்லை. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கறுப்பு மையிட்டு அழிக்கவும், ஸ்டிக்கர் வைத்து ஒட்டவும் உத்தரவு போட்டு மேலும் சிறுமைப்பட்டு இருக்கிறார். அரசு ஆணையாகப் பிறப்பிக்காமல், ஓர் ஆணையை கல்வித் துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த ஆவணம் என் கைக்கு வந்திருக்கிறது (அதைக் காட்டினார்). இது எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்காதீர்கள்... அங்கே நம்மவர்கள் சிலர் இருக்கிறார்கள். கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையை மறைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதற்கு ஒரே காரணம், நம் தலைவருக்கு நெருங்கிய இடத்தில் கவிக்கோ இருப்பதுதான். அடுத்து 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என்ற வாக்கி யத்தில் அண்ணாவை நீக்கச் சொல்லி இருக்கிறாராம். பாருங்கள், அந்தக் கட்சியின் பெயர் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’. ஆக, பழையபடி தனது ஃபார்முலாவைக் கையில் எடுக்க ஆரம்பித்து இருக்கும் ஜெயலலிதாவைப் பார்த்து ஒன்று சொல்லிக்கொள்கிறேன். புதிய சட்டமன்றக் கட்டடத்தை வைத்தோ, அல்லது நாங்கள் நிறைவேற்றிய வேறு மக்கள் நலத் திட்டங்களை வைத்தோ, எங்கள் மீது வழக்குத் தொடர நினைத்தால்... தாராளமாகத் தொடர்ந்துகொள். அதை சந்திக்க நாங்கள் தயார். கடந்த முறை எங்கள் மீது போட்ட மேம்பால வழக்கில் குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்ய உன்னால் முடியாமல் போனதை நினைவில்கொள்.

புதிய சட்டமன்றம் கட்டியதே பெரிய முறைகேடு என்கிறாய்... ஆனால், அன்றைக்கு இந்த அம்மையார் முதல்வராக இருந்தபோதுதானே, 'இந்த பழைய சட்டசபை பழுதடைந்துவிட்டது, மழை பெய்தால் ஒழுகுகிறது. அதனால், மகாபலிபுரம் சாலையில் புதிய சட்டப் பேரவை பிரமாண்டமாகக் கட்டப்படும்’ என்று திட்டம் போட்டார். பிறகு அந்த இடத்தை மாற்றி ராணி மேரி கல்லூரி இடத்தைக் குறிவைத்து, அதை இடிக்கப் பார்த்து வாங்கிக்கட்டிக்கொண்டார். இப்போது என்னவோ புதிய சட்டசபையை தி.மு.க. அரசு கட்டியதே எங்களுக்காகத்தான் என்பதுபோல் பேசுகிறார். எதிர் காலத்தில் நீ ஒரு அடி பாய்ந்தால், பதினாறு அடி பாய நாங்கள் தயார்!'' என்று சீறி முடித்தார்!

கருத்துகள் இல்லை: