வெள்ளி, 24 ஜூன், 2011

பிருந்தாவுக்கு ராஜ்ய சபா சீட்டை ஜெயலலிதா வழங்குவார் என்றே பலரும் நம்புகிறார்கள்

டெல்லி: ராஜ்யசபா பதவிக்காலத்தை முடிக்கும் பிருந்தா காரத் மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோரை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்புதவற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக தடுமாறி வருகிறதாம். இருவரையும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததே இதற்குக் காரணம்.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதில் மோசமான தோல்வி மேற்கு வங்கத்தில்தான் கிடைத்தது.

இதன் விளைவு விரைவில் பதவிக்காலத்தை முடிக்கும் மூ்ன்று ராஜ்யசபா உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது சிபிஎம்.

இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களான பிருந்தா காரத், சீதாராம் எச்சூரி மற்றும் முகம்மது அமீன் ஆகியோரின் ராஜ்யசபா உறுப்பினர் பவதிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல இடதுசாரி கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பியின் அபானி ராயின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது. ஆனால் இந்த நான்கு இடங்களுக்கும் மீண்டும் ஆட்களை அனுப்புவதில் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தது பிருந்தா காரத் மற்றும் எச்சூரியை மட்டுமாவது எப்பாடுபட்டாவது ராஜ்யசபாவுக்கு அனுப்ப சிபிஎம் தீவிரமாக உள்ளது. காரணம், இந்த இருவரும் டெல்லி வட்டாரத்தில் கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதால் இவர்களை இழக்க அக்கட்சி விரும்பவில்லை.

இருப்பினும் தற்போது மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணிக்கு மொத்தம் 62 இடங்களே உள்ளன. இதில் சிபிஎம்முக்கு 40 எம்.எல்.ஏக்களே உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே மேற்கு வங்கத்திலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை.

கேரளாவிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்றாலும், கேரள இடதுசாரி கட்சிகள் இதுவரை வெளியாட்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். எனவே அங்கு பிருந்தாவையோ அல்லது எச்சூரியையோ நிறுத்த முடியாது என்ற இக்கட்டான நிலை.

இதனால் தற்போது தமிழகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது சிபிஎம். தமிழகத்தில் அதிமுக உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் ராஜினாமாவால் ஒரு இடம் காலியாகியுள்ளது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்த இடம் கிடைத்தால் தனது மனைவியான பிருந்தாவை நிறுத்தலாம் என்பது பிரகாஷ் காரத்தின் திட்டம். இருப்பினும் இதுகுறித்து ஜெயலலிதா இதுவரை பதில் ஏதும் தரவில்லை என்று தெரிகிறது.

அதேசமயம், சிபிஐயும், இந்த இடத்திற்குக் குறி வைத்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நேரில் சந்தித்து இதுகுறித்ததுப் பேசியதாக தெரிகிறது.

இந்த ஒரு இடத்தை ஜெயலலிதா தானே வைத்துக் கொள்வாரா அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜ்யசபாவில் தற்போது அதிமுகவுக்கு ஐந்து எம்.பிக்களே உள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது கட்சியின் பலத்தைக் கூட்டுவதில் ஜெயலலிதா முன்னுரிமை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

English summary
With Election Commission announcing the dates for filing nominations to the Rajya Sabha, the CPI(M), which faced a drubbing in the West Bengal Assembly elections, is forced to look down south to Tamil Nadu, to get its Politburo member Brinda Karat re-elected to the Upper House. Party general secretary Prakash Karat has approached CM Jayalalitha in this regard, sources say. TN has one RS seat vacant and going to polls soon. Presently, the AIADMK has five members and the DMK seven in Rajya Sabha.
 

கருத்துகள் இல்லை: