ஞாயிறு, 19 ஜூன், 2011

சென்னை ஏர்போர்ட்டி லேயே ப.சி. மீது எழுந்த எரிச்சலை படபடவென்று கொட்டி

காங்கிரஸுடனான கூட்டணிக்கு ஜெ. க்ரீன் சிக்னல் தெரிவிப்பாரா? அவரை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பிரதமர் மன்மோகன்சிங்கிடமிருந்து ஜெ.வுக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது? -என்ற ரீதியில் பலரது கவனத்தையும் திருப்பிய ஜெ.வின் டெல்லி விசிட், ஒருவழியாய் முடிந்திருக்கிறது.

சென்னை ஏர்போர்ட் தொடங்கி ஜெ.வின் டெல்லி சந்திப்புகள், மீடியா பேட்டி வரை அரங்கேறிய சில சுவாரஸ்ய சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

13-ந்தேதி மதியம் கார்டனில் இருந்து சென்னை விமான நிலையம் கிளம்பினார் ஜெ. ஏர்போர்ட்டில் ப்ளூ கேட் என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான ஸ்பெஷல் வழி. இதில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை. 5-ஆம் நெம்பர் கேட் என்பது எஸ்.பி.ஜி. பாதுகாப்பு உள்ள வி.ஐ.பி.கள் மட்டும் போய் வருவதற்கான வழி. குறிப்பாக சோனியா, தமிழக முதல்வர், ராகுல்காந்தி போன்றவர்களுக் கானது. இந்த வழியில் செல்கிறவர்கள்... ஃப்ளைட் ஏறும் வரை ஓய்வெடுக்க மிகப்பெரிய லாபி உண்டு.

கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெ.வின் கார் 5-ஆம் நெம்பர் கேட்டை தவிர்த்து 6-ஆம் நம்பர் கேட்டில் "சர்'ரென நுழைந்தது. இந்த 6-ஆம் நம்பர் கேட், சொந்தமாக விமானம் வைத்திருப்பவர் கள் மட்டும் பயன்படுத்தக் கூடிய வழியாகும். ஜெ. வின் காருக்கு முன்னால் வந்த மாநில காவல்துறை யின் காரை தடுத்து நிறுத் திய மத்திய பாதுகாப்பு போலீஸ் டீம், ""ஐந்தாம் நெம்பர் கேட்டின் வழியாகத்தான் முத லமைச்சர் போக வேண்டும். அந்த கேட்தான் அவர்களுக்கு உரியது. 6-ஆம் கேட்டுக்கு வந்தது தவறு'' என்று சொல்ல, ""கடந்த 5 வருஷமா இந்த கேட்டைத்தான் ஜெயலலிதா பயன்படுத்தினார். அதனால் இந்த வழியாகத்தான் போவார்'' என்று வாதம் செய்தனர் மாநில போலீ ஸார். இந்த சம்பவத்தால், இரண்டு, மூன்று நிமிடம் ஜெ.வின் கார் காத்திருக்க வேண்டியதாயிற்று.

மாநில காவல்துறை சொன்ன தை ஏற்றுக் கொண்டு, ஜெ.வின் காரை அனுமதித்தனர். அதேசமயம், ஜெ.வுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட போலீஸார், உள்ளே செல்ல முயற் சிக்க, ""பாஸ் இருக்கிறவங்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும்'' என்று மத்திய பாதுகாப்பு போலீ ஸார் ஆர்கியூ பண்ண, மாநில போலீஸார் எதிர்விவாதம் பண்ண... அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் பாஸ் வைத் திருந்த போலீஸ் ஆபீசர் ஒருத்தரை யே வெளியே தள்ளி விட்டு விட்டது மத்திய போலீஸ் டீம். இதனால் ஜெ. வுடன் வந்த போலீஸ் டீம் உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை.

விமான நிலையம் முழுக்க ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மத்திய போலீஸ் டீம் மற்ற அதிகாரிகளை அனுமதிக் காதது குறித்தும் தள்ளுமுள்ளு நடந்தது குறித்தும் ஜெ.வின் காதுக் குத் தகவல் போனதோடு... "தமிழக காவல்துறையையே அவமதிப்பது போல் மத்திய டீம் நடந்து கொண்டது' என்றும் முறையிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சி.யால்தான் மாநில அதிகாரிகளிடம் இத்தனை கெடுபிடி காட்டப்பட்டிருக்கிறது என நினைத்த ஜெ., ப.சி. மீது அப்போதே எரிச்சலடைந்தார். ஜெ. டெல்லிக்கு புறப்பட்டதும் மத்திய போலீஸ் டீமுக்கும் மாநில போலீஸுக்கும் மீண்டும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

2009-ல் எம்.பி. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வசந்த் கன்ச்சில் என்ற பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்தார். இந்த பங்களாவில்தான் முதலில் தங்க முடிவெடுத்தார். இதற்காக அந்த பங்களா சுத்தப்படுத்தப்பட்டு ரெடியாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திடீர் முடிவால் தமிழ்நாடு இல்லத்திலே தங்கினார் ஜெ.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஜெ.வை டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் சந்தித்து அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். சோனியாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரியவரான ஷீலாதீட்சித் ஜெ.வை சந்தித்ததால்... ஷீலாதீட்சித் மூலம் வெளிநாட்டில் இருக்கும் சோனியா ஏதேனும் ஜெ.வுக்கு தகவல் சொல்லி அனுப்பி இருப்பாரோ என்று டெல்லியில் செய்தி பரவியது.

இந்த பரபர தகவலும், ஷீலாதீட்சித் சந்திப்பும் தி.மு.க. தலைமைக்குத் தெரிய வர... "சோனியா ஏதேனும் சீக்ரெட்டாக காய் நகர்த்துகிறாரா?' என்கிற சந்தேகம் தி.மு.க. தலைமைக்கு உண்டா னது. டி.ஆர்.பாலு மூலம் இதை விசாரிக்கச் சொன்னது. பாலுவும் அகமது படேலிடம் விசாரித்தார். இதுபற்றி நாம் நமது டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ""ஜெ.வும் ஷீலாவும் நண்பர்கள். டெல்லிக்கு ஜெ. வந்து ரொம்ப நாளாகி விட்டது. அதேசமயம் தற்போது ஜெ. முதல்வராகிவிட்டார். முதல்வரானதும் வாழ்த்துக்கள் சொன்னார் ஷீலா. அப்போதே "நான் டெல்லிக்கு வரும்போது அவசியம் நாம் சந்திக்க வேண்டும்' என்று ஜெ. சொல்லியிருந்தார். அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்தது. நட்பு ரீதியிலான சந்திப்பு என்றாலும் டெல்லி அரசியல் குறித்து ஷீலாவிடம் நிறைய பேசியிருக்கிறார் ஜெயலலிதா'' என்கின்றனர்.

பா.ஜ.க. தரப்பிலிருந்து ரவிசங்கர் பிரசாத்-ஜெ.வை சந்தித்தார். ""தமிழக பா.ஜ.க.விடம் தேர்தல் பற்றி விசாரித்தபோது அ.தி.மு.க. ஜெயிக்கும் என்றுதான் சொன்னார்களே தவிர இந்த அளவுக்கு அபரிமிதமான வெற்றி கிடைக்கும் என்று சொல்லவே இல்லை'' என்று ரவிசங்கர் சொல்ல உற்சாகமானார் ஜெ. மேலும், ""ஜூலையில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பா.ஜ.க. எடுக்கும் இஷ்யூவுக்கு அ.தி.மு.க. ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று ரவிசங்கர் கேட்டுக்கொள்ள... ""அதை அப்போதைக்குப் பார்த்துக்கொள்ளலாம்'' என்கிற ரீதியில் பதில் சொன்னாராம் ஜெ.

இந்தப் பயணத்தின்போது... மத்திய அரசுப் பணியில் உள்ள தமிழக கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பில் ஐ.ஏ.எஸ். அதி காரிகளான ஆனந்த், சந்திரமௌலி, சக்தி கந்த தாஸ், ஸ்கந்தன், கோபாலன், சுமிதா நாகராஜன், மிருதியுங் சிங் சாரங்கி, அஜய் பட்டாச்சார்யா, ஃபரூக்கி, அசோக்குமார் குப்தா, சசிசேகர், ராஜீவ் சௌபே, சுப்ரியா சாகு, முருகானந்தம், ஜேக்கப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் கலந்துகொண்டனர். விஜயகுமார் ஐ.பி.எஸ்.சும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் ""தமிழகத் தைச் சேர்ந்த திறமையான, நேர்மையான அதிகாரிகள் எல்லாம் டெல்லியில் உட்கார்ந்துகொண்டால் எப்படி? உங்களின் ஆலோசனைகள் மத்திய அரசுக்கு பயன்பட்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?'' என்று ஜெ. கேட்க... ஒரு அதிகாரி, ""அப்படி இல்லைங்க மேடம். தமிழகத்தின் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. ஆனால் மாநில அரசு பணியில் இருக் கும்போது ஒரு துறையிலே நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அதனால் துறை ரீதியாக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் முற்றுப்பெறுவதே இல்லை. இதனால் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது'' என்றார் பகிரங்கமாகவே. மற்றொரு அதிகாரி ""நல்லா வேலை செய்கிற அதிகாரிகளுக்கு சரியான துறை கிடைக்காதபோது இயல்பாகவே வெக்ஸ் ஆகி விடுகிறோம்'' என நேருக்கு நேராய் சொன்னார்.

"ஜெ.'வோ, ""இப்படியெல்லாம் சொல்கிறீர் கள். ஆனால் மாநில பணிக்கு வாருங்கள் என்றால் மறுத்துவிடுகிறீர்களே?'' என்று கேட்க...

""பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் மேடம். இப்போது சொல்லுங்கள். நாங்கள் மாநில பணிக்குத் திரும்ப ரெடியாக இருக்கிறோம். திறமைக்குத் தகுந்த துறையை ஒதுக்குங்கள்'' என்றனர்.

மத்திய அரசு பணியில் உள்ள தமிழக கேடர் அதிகாரிகள் விரைவில் மாநிலப் பணிக்கு திரும்பும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் விரைவில் நடக்கும். தற்போது பட்ஜெட் தொடர்பான பணிகள் நடந்து வருவதால், பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த மாற்றம் இருக்கலாம் அல்லது பட்ஜெட் முடிந்ததும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறது அதிகாரிகள் தரப்பு.



விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸிடம் ""மாநிலப் பணிக்கு வருமாறு அழைத்தும் ஏன் தயங்குகிறீர்கள்?'' என்று தனிப்பட்ட முறையில் ஜெ. கேட்டதாகவும், அதற்கு விஜயகுமார், ""நான் ரிட்ட யர்டு ஆக இன் னும் 8 மாசம் தான் இருக்கு. அந்த நாட்களில் என்ன சாதிக்க முடியும்னு எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் தயக்கம்'' என்று கூறிய தாகவும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படு கிறது. பிரதமரின் சந்திப்பை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெ., வழக்கம்போல், தி.மு.க.வை கடுமையாகச் சாடிவிட்டு, ""காங்கிரசுக்கு ஆதரவு தேவை என்றால் அது என்னிடம் வந்து கேட்கட்டும். நானாக ஆதரவு தரவேண்டிய அவசியமில்லை'' என்றார் அதிரடியாக.

ஒரு இணையதள நிருபர் ப.சி. பற்றி கேட்க, ""எம்.பி. தேர்தலில் அவர் மோசடித்தனமாக வெற்றி பெற்றார். அப்படிப்பட்டவர் உள்துறை அமைச்சர் பதவியிலே உட்கார்ந்திருக்கிறார். அவர் தகுதியற்றவர். பதவி விலக வேண்டும்'' என... சென்னை ஏர்போர்ட்டி லேயே ப.சி. மீது எழுந்த எரிச்சலை படபடவென்று கொட்டி... காங்கிரஸ் தரப்பை திகைக்க வைத்து விட்டே தமிழகத்துக்கு ஃப்ளைட் ஏறினார் ஜெ.

கருத்துகள் இல்லை: