ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஜெயகாந்தன் சரியென்று பட்டதை தயக்கமின்றி வெளிப்படுத்துபவர்

எவனொருவன் நன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகள் மீதோ துவேசம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும் உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்கு நானோர் உதாரண புருஷன் என்ற வேட்கையோடு செயலாற்றுகிறானோ, அவன் அத்தளவில் மனித இயங்கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்கு வாதிதான்
இப்படி ஜெயகாந்தன் எழுதியுள்ளார்.
நான் தமிழில் படிப்பதே இல்லை என பெருமை பேசியவர்களை தமிழில் படிக்க வைத்தவர் ஜெகாந்தன். ஆங்கிலம் படித்த பலரும் இவரது கதைகளை தேடிப் படிக்க ஆரம்பித்தனர். அறுபதுகளில் அவரது கதைகளும் நாவல்களும் தமிழ் கூறும் தேசம் எங்கும் புகழ்பெற்றிருந்தன. ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் போட்டி போட்டுக் கொண்டு ஜெயகாந்தனின் படைப்புக்களை வாங்கிப் பிரசுரித்தன. இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்தது.
ஜெயகாந்தன் உரைநடை இலக்கியங்களை எழுதியதோடு கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இலக்கியத்தில் பிரசாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயகாந்தனின் விளக்கம் இவ்வாறு அமைகிறது.
பிரசாரம் இல்லாத இலக்கியமே கிடையாது. பிரசாரங்களும் இலக்கியமாவதுண்டு. இலக்கியங்களும் பிரசாரமாவதுண்டு. முன்னது சிறப்பு. பின்னது வீழ்ச்சிஎனக் குறிப்பிடுகின்றார். விமர்சனங்கள் பற்றி ஜெயகாந்தன் இவ்வாறான கருத்தை கொண்டுள்ளார். ஒரு படைப்பாளிக்குப் பிரயோசனப்படாத எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லை.
ஒரு படைப்பை விடவும் விமர்சனம் படைப்பின் ஆக்கம் நிறைந்ததாக இருக்கும் போது அந்தப் படைப்பாளி முதிர்ச்சி அடையாதவன் என்கிற முறையில் அந்த விமர்சனத்தினால் பயனடையலாம்.
இதனை ஒரு பொது விதியாக மரபாக ஆக்குவது படைப்பிலக்கியத்துக்கு அதிகப் பலனைத்தராது. விமர்சனத்தின் நோக்கம் இரசனைக்கு உதவுவதுதான்எனக் கூறியுள்ளார். விமர்சகர்களாக நம்மை வெளிக்காட்டிக் கொள்ள முயல்பவர்களுக்கு ஜெயகாந்தனின் கூற்று உண்மையை எடுத்துரைப்பதாகவுள்ளது.
தனக்கு சரியெனப் பட்டவற்றை தயக்கமின்றி எழுதுவதால் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்ற ஒரு படைப்பாளியாக ஜெயகாந்தன் காணப்படுகின்றார். நான் சரி என நினைப்பவற்றை தயக்கமின்றி வெளிப்படுத்தும் இலக்கியவாதி தான் வாழ்கின்ற காலத்தில் மாத்திரமல்லாமல் அதற்கு பின்பும் கருத்துக்கள் வாயிலாக சமூகத்தில் வாழ்த்து கொண்டேயிருப்பான். பாரதி வாழும் காலத்தில் இந்தளவுக்கு போற்றப்படவில்லை.
ஜெயகாந்தன் வாழும் போதே போற்றவும் தூற்றவும் படுகின்றார். ஒருவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் ஏற்புடையதாக அமையாது என்பதற்கு ஜெயகாந்தன் நல்லதொரு உதாரணமாக விளங்குகின்றார்

கருத்துகள் இல்லை: