செவ்வாய், 7 டிசம்பர், 2010

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையில் முகாம்களில் இன்னும் 17 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார். ”இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது எழுதிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தேன். முகாம்களில் தங்கியுள்ள 17 ஆயிரம் பேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.
முகாம்களில் உள்ளவர்களை மறுகுடியமர்த்தவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா போதுமான நிதியுதவி அளித்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.
வடபகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ஆயிரம் வீடுகள் கட்டும் பணியையும் ஆரம்பித்து வைத்தேன். அத்துடன் வடபகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 500 டிரக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.
இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழர்கள் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் முறையான பேச்சு வார்த்தையை துவக்கும்படி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளேன்.
மீன்பிடிக்கும் உரிமை தொடர்பாக, 2008ம் ஆண்டு இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்தினேன்” என கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: