வினவு
அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்த விவகாரத்தின் தற்போதைய நிலவரம்.
இந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட
அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன்.
குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின்
ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில்
முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி
இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம்
ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது.
‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது
அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும்
ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோவிந்தா கும்பலின்
(மாமியார், மாமனார்) நிலை. வழக்கம் போல் கணவர் நடுநிலை. ஆனால் கதை
எதிர்பாராத விதத்தில் வேறு மாதிரி தடம் மாறியது.
கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து 3 மாதம் வரை ஓய்வு எடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘இது சாத்தான் வழிபாடுக்கு கர்த்தர் கொடுத்த
தண்டனை’ என்று அல்லேலுயா கும்பல் தீர்ப்பு சொன்னது. ‘ஜபக் கூட்டம், அது இது
வென பெருமாளை அவமானப் படுத்தியதால் வந்த தண்டனை’ என்று வாதிட்டது கோவிந்தா
கும்பல். போட்டி போட்டுக் கொண்டு தண்டனை கொடுக்கும் எவ்வளவு நல்ல
கடவுள்கள்!
‘ஒரு பெரிய தொகையை சபைக்கு கொடுத்துவிட்டு ஜபக் கூட்டம் நடத்தி புனித
பிரார்த்தனை ஒன்றை செய்ய வேண்டும்’ என்று அல்லெலுயா பாதிரியார்
சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தா கோஷ்டி ஒரு படி முன்னேறி சிந்தித்தது.
‘இந்த கூட்டத்தை ஒரேயடியாக அடக்கா விட்டால் நல்லது நடக்க போவதில்லை. இனி
சமரசமில்லை’ என்று கறாரான முடிவுக்கு வந்துவிட்டது.
ஜபக்கூட்டம் என்று பிரச்சனையை அல்லேலுயா கிளப்பியது வரை
காத்துக்கொண்டிருந்த கோவிந்தா கூட்டம் சண்டையை நன்றாக வலுக்க செய்து,
பின்னர் ஒரு அதிரடி இடியை தூக்கி போட்டது.
“இனியும் இந்த மாதிரி அல்லேலுயா கூட்டம், கிறிஸ்துவ மதம் பற்றிய
பேச்செல்லாம் இந்த வீட்டில் கேட்கக் கூடாது. மீறினால் சொத்தில் சல்லி பைசா
கூட விடாமல் திருப்பதிக்கு எழுதி வைத்துவிடுவேன்” என்று ஒரு செக் வைத்தார்
கோவிந்தா கூட்டத்தைச் சேர்ந்த மாமனார்.