வியாழன், 9 பிப்ரவரி, 2023

6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை- அமைச்சர் மனோ தங்கராஜ்

 மாலைமலர் : நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வெகுவிரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை.
நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான பிரேரணை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: