வியாழன், 22 டிசம்பர், 2022

கவிஞர் தாமரை : ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி. சிக்கலில் விஜி பழனிச்சாமி

கோவை விவகாரம்

Gurusamy News18 Tamil Nadu : 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள்.. விஜிஸ் பழனிசாமி இந்தப்பெயரை இதுவரை நான் உச்சரிக்கவில்லை. பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் பேனாவால் எழுத வேண்டி நேர்கிறதே .. என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இளைஞரின் மரணத்திற்கு சின்னத்திரையில் பணியாற்றும் விஜிஸ் பழனிசாமி காரணம் என கவிஞர் தாமரை தனது பேஸ்புக் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற ரத்தினசீலன். கடந்த செப்டம்பர் மாதம் 21- தேதி தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் வழக்கு குடும்ப பிரச்னை காரணமாக நிகழ்ந்தது என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. மகன் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி விஜி பழனிசாமி தான் என வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை தூசு தட்ட ஆரம்பித்துள்ளது காவல்துறை.
ஏற்கனவே திருமணமான விஜி பழனிசாமி முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக தனது மகனை திருமணம் செய்துக்கொண்டதாகவும் அவரை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தள்ளி இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் சிவாவின் தற்கொலைக்கு காரணம் விஜியும், அவரது குடும்பத்தினரும் அவரது தோழிகளுமே  என  ஆடியோவில் தெரிவித்து இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக  43 ஆடியோக்களையும் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பழக்கம் ஏற்பட்டது எப்படி..
இன்ஸ்டாகிராமில் கவிதை எழுதுவதன் மூலம் சிவாவுக்கும் விஜிக்கும் அறிமுகம் ஏற்பட்டது, பின்னர் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் தன்னை பார்த்து கொள்ள யாரும் இல்லை என கூறி வீட்டில் வந்து தங்கினார். தனது மகனுக்கு அவரை பிடித்து போனதால் திருமணம் செய்து கொண்டார்.

அதே வேளையில் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவரது டார்ச்சர் காரணமாகவே  மனரீதியாக பாதிக்கப்பட்டு எனது மகன் தற்கொலை செய்து கொண்டார் சிவாவின் தாயார் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

”மகன் இறந்து சில தினங்கள் கழித்த பின்னரே இந்த  ஆடியோக்கள் எங்களுக்கு கிடைத்தது. என்ன செய்வது என தெரியாமல் இருந்த நிலையில்  திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை மூலம் மீண்டும் காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என தற்கொலை செய்து கொண்ட சிவாவின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கவிஞர் தாமரை முகநூலில் தெரிவித்துள்ளார். தாமரையின் கணவர் தமிழ் தேசியவாதியான தியாகுவிற்கும் , விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக தனது  குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், இந்த விஜி என்கிற விஜயலட்சுமி குறித்து கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். கவிஞர் தாமரையின் முகநூல் பதிவால் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம், தற்பொழுது எழுத்துப்பூர்வமாக புகாராகவும்  கோவை காவல்துறையிடம் சென்றிருக்கிறது. சிவாவின் பெற்றோர் அளித்த புகாரையும், அதில் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள ஆடியோக்களையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: