வியாழன், 22 டிசம்பர், 2022

அதிகரிக்கும் கொரோனா அபாயம்... ஸ்டாலின் போட்ட உத்தரவு - வெளிநாட்டில் இருந்து வருவோர் கொரோனா கண்காணிப்பு

 zeenews.india.com  -  Sudharsan G  :  கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் BF.7, BF.12 போன்ற கரோனா தொற்றுவகைகள் அதிகம் பரவும் தன்மையுடையது எனக்கூறப்படும் நிலையில்,
இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், சீனா, ஹாங்காங், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் நேற்று காலை ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,"கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.


இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இன்று தங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்டவை வெளிநாட்டில் இருந்து விமானம் நிலையம் மூலம் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நேற்று (டிச. 21) முதல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில், வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.  கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் தெரிவித்தாரப். மேலும், முகக்கவசம் அணிந்து மக்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும் என ஜெகதீப் தன்கர் கோரிக்கைா விடுத்தனர்.

கருத்துகள் இல்லை: