ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவன் லெபனான் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாதி மதார் என்பவனாகும்

May be an image of 8 people, people standing and outdoors

Rishvin Ismath   :  எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்திய தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டான்.
நிவ்ஜேர்ஸியின் ஃபேர்வீவ் பகுதியில் வசித்து வந்த 24 வயதான ஹாதி மதார் என்பவனே சல்மான் ருஷ்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெபனானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியா இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த ஹாதி மதார்
ஈரானிய இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்பது அவனது பேஸ்புக் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அவனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் நிவ்யோர்க் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலாளி போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
..கத்திக் குத்திற்கு இலக்கான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல மணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் தற்பொழுது அவர் செயற்கைச் சுவாசக் கருவியின் (Vandilator) துணையில் உள்ளார். "சல்மான் ருஷ்டி தற்பொழுது பேசக் கூடிய நிலையில் இல்லை. அவரது ஒரு கண் பார்வை இழக்கப்படும் அபாயம் உள்ளது, கழுத்துப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலால் அவரது ஒரு கைக்கான நரம்புகள் துண்டிக்கப் பட்டிருந்தன, அவரது ஈரலிலும் காயங்கள் உள்ளன" என சல்மான் ருஷ்டிக்காக பேசவல்ல அவரது பிரதிநிதியான அன்ட்ரீவ் வைலி தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டிக்கு உயிராபத்து இல்லையானாலும் அவர் குணமடைய நீண்ட காலம் தேவைப்படலாம் என்று அவருக்கு உதவி புரிந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
..
1988 ஆம் ஆண்டு பிரசுரமான "சாத்தானிய வசனங்கள்" எனும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதியதற்காக 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் குமைனியால் மரணதண்டனை பத்வா (மதத் தீர்ப்பு) விதிக்கப்பட்டது. சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவருக்கு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் கொலைச் சன்மானத்தை ஈரான் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் குமைனியால் வழங்கப்பட்ட மரணதண்டனைப் பத்வாவை 2005 ஆம் ஆண்டு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமேனி மீண்டும் உறுதி செய்திருந்தார். சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரானின் தூண்டுதலின் பங்கு மறுக்கப்பட முடியாததாகும்.
.
.'Midnight's Children' (நள்ளிரவின் சிறார்கள்) என்ற அவரது புதினத்திற்காக (Novel) உலகின் தலைசிறந்த புதினங்களுக்காக வழங்கப்படும் புக்கர் இலக்கியப் பரிசு சல்மான் ருஷ்டிக்கு 1981 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 75 வயதான சல்மான் ருஷ்டி இந்தியாவின் மும்பையில் பிறந்தவர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறித் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.
.
.மத விவகாரங்களில் ஷியா - சுன்னி என்று பிரிந்து ஒருவரை ஒருவர் முஸ்லிம் இல்லை என்று கூறித் தமக்கிடையே குண்டுத் தாக்குதல்கள் கூட நடத்திக் கொண்டாலும் கூட ,

சல்மான் ருஷ்டி மீதான கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவன் ஷியா பிரிவைச் சேர்ந்தவன் என்ற போதும் தீவிர இஸ்லாமியவாதிகள் எவ்வித வேறுபாடுமின்றி தாக்குதலை வரவேற்றுள்ளமையை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.

கருத்துகள் இல்லை: