புதன், 17 ஆகஸ்ட், 2022

அதிமுக பொதுக்குழு.. ஈபிஎஸ் வாதம் அடிப்படையற்றது.. பன்னீர் தரப்பு பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் ..தீர்ப்பின் முழு விவரம்..

tamil.oneindia.com- Vignesh Selvaraj  :சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்பின் முழு விபரங்கள் வெளியானது. பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை, பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது; தற்காலிக அவைத்தலைவரால் கூட்டத்தை கூட்ட முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
OPS வசமான அதிமுக
ஒரு கட்சியின் உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால் அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் மறுக்க முடியாது. என தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23ல் காலவதியாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கற்பனையானது, அடிப்படை இல்லாதது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையை பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் பிரதிபலித்தார்களா என்பது கேள்வி என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பலத்தோடு இருக்க வேண்டும்.. இனியாவது நல்ல முடிவு எடுங்க.. பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்அதிமுக பலத்தோடு இருக்க வேண்டும்.. இனியாவது நல்ல முடிவு எடுங்க.. பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

அங்கேயே நாம ஜெயிச்சிட்டோம்.. 'அவங்க சொன்ன யோசனை கரெக்ட்’ - ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் சொன்ன விஷயம்! அங்கேயே நாம ஜெயிச்சிட்டோம்.. 'அவங்க சொன்ன யோசனை கரெக்ட்’ - ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் சொன்ன விஷயம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என உத்தரவிட்டார் நீதிபதி. இதன்மூலம் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லாமல் போனது.

அவைத்தலைவருக்கு தகுதி இல்லை
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தீர்ப்பில், பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைத்து கூட்டுவதற்குத்தான் கட்சி சட்ட விதி உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 பகுதி பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குதான் கோரிக்கை வைக்க முடியும்.

ஒருங்கிணைப்பாளர் மறுத்தால் அவ்வளவுதான்
இந்த கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவைத் தலைவருக்குத்தான் 5ல் 1 பகுதியினர் கடிதம் அனுப்பி உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட, சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்ட முடியாது. எனவே ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை.

கற்பனையான வாதம்
ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை.

சவுகரியமாக அமர்ந்துவிடுவார் ஈபிஎஸ்
ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓ.பி.எஸ், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இரட்டைத் தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்விதம் புள்ளிவிவர அடிப்படையும் இல்லை.

திடீரென எப்படி?
இரட்டைத் தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர். இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றைத் தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது.

செல்லாத பொதுக்குழு
கட்சி தலைமை எடுக்கும் முடிவில் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. கட்சி சட்ட விதிகளுக்கு முரணாக ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது என்றால் அதில் கட்சியின் உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை ஏற்க முடியாது. அதனால் ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லாது.

கட்சிக்கு தாங்க முடியாத இழப்பு
செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது.

ஒற்றைத் தலைமைக்கு தடை இல்லை
ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது.

மீண்டும் நாடலாம்
ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ இந்த பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்." என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை முடித்துவைக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை: