திங்கள், 15 ஆகஸ்ட், 2022

சுதந்திர போராட்ட வீரர்களை மோதி அரசு தவறாக சித்தரிக்கிறது” – சோனியா காந்தி

BBC Tamil  :  பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின பேச்சை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சாதனைகளை மோதி அரசு தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சோனியா காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில், "75 வருடங்களில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம், ஆனால், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் பெருமைக்குரிய சாதனைகளையும் சிறுமைப்படுத்துவதிலேயே இன்றைய சுயநல அரசு குறியாக உள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.


மேலும், "இந்த நாசிச அரசு, அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதையும், காந்தி, நேரு, படேல், ஆசாத் ஜி போன்ற தலைசிறந்த தலைவர்கள் குறித்து அவதூறுகளை பரப்புவதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்திலும் மோதியின் பேச்சு விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்களிடம் கொள்ளையடித்து தேர்ந்த தொழிலதிபர் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புபவர்கள் மகாத்மா காந்தியின் பெயரை எடுக்காமல் இருப்பது நல்லது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் உள்ள ஏழைகளின் நிலைமையைக் குறிப்பிட்டு, "இந்த நாட்டில் 84 சதவீதத்தினர் குறைந்த வருமானம் கொண்டவர்களாக உள்ளனர். இந்தியா மீண்டும் ஏழ்மை நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தொழில்துறை நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்தவர்களின் முயற்சிகள் மறைக்கப்படவில்லை." என மற்றொரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதி தன்னுடையே உரையில், மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க தன்னையே அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோதி சுதந்திர தின உரை

இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஐந்து உறுதிமொழிகள்:

    முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது.

    இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.

    மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்வோம்.

    கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.

மேலும் தனது சுதந்திர தின உரையில், "இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. உலகின் எல்லா பகுதிகளிலும் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. ஆருடம் அனைத்தையும் தகர்த்து தேசியக்கொடி பறக்கிறது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது" என குறிப்பிட்டார் மோதி.

மேலும், அம்பேத்கர், மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுலா கான், ராம் பிரசாத் பிஸ்மில் உள்ளிட்டோரை பிரதமர் மோதி நினைவுகூர்ந்தார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த பெண்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, ஜான்சி ராணி லஷ்மிபாய், ஜல்கரி பாய், சென்னம்மா, மேகம் அஸ்ரத் மஹால் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்தார்.

மேலும், "டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், எஸ்.பி.முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீனதயாள் உபாத்யாயா, ஜே.பி.நாராயண், ஆர்.எம்.லோஹியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளின் முன் நாம் தலைவணங்கும் தினம் இது" என அவர் குறிப்பிட்டார்.

"சுதந்திர போராட்டம் குறித்து நாம் பேசும்போது, பழங்குடி சமூகம் குறித்து நாம் மறக்கக்கூடாது. பகவான் பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜூ, கோவிந்த் குரு என சுதந்திர போராட்டத்தின் குரலாக மாறிய எண்ணற்றோர் உள்ளனர்.

ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்" என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், "நாம் சுதந்திரம் அடைந்தபோது நமது வளர்ச்சிப் பாதையில் பலருக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் விசேஷமானது என்பது அவர்களுக்குத் தெரியாது" என அவர் கூறினார்.

"நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 75 ஆண்டுகளை கடந்த சுதந்திரம் நாட்டின் புதிய தொடக்கம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவன் என்றாலும் தியாகங்களை உணர்ந்துள்ளேன்.

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொணர்வோம். உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான்.

நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக்கொண்டனர். சுதந்திரம் பெற்ற இந்த 75 ஆண்டுகளில் மக்கள் பல இன்னல்களை சகித்துக்கொண்டனர். கடுமையான போராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சிப் பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது.

பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு." என்றும் அவர் கூறினார்.

மேலும், "ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூர் 200 கோடி டோஸ்களை தாண்டியுள்ளது எனவும் பிரதமர் மோதி கூறினார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளும் பங்கேறுள்ளனர். செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பட்டம், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டைக்கு செல்வதற்கு முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார்.


காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை

பிரதமர் மோதி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ட்விட்டரில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் தங்கள் இல்லங்களில் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோதி முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்

கருத்துகள் இல்லை: