செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஆசையாய் வளர்த்த ஆட்டுக்குட்டிக்காக உயிரைவிட்ட மாணவன்... கடன்காரர் மிரட்டலால் விபரீதம்

salem student suicide

Divakar M | Samayam Tamil : சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை பக்கமுள்ள வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் நிர்மல்ராஜ் (18). இவர் காளிப்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா அதேபகுதியை சேர்ந்த சுதாகர் (28) என்பவரிடம் 40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதில் 20 ஆயிரத்தை கொடுத்தார். மீதமுள்ள 20 ஆயிரத்தை கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சுதாகர், அவரது தாய் சரசு ஆகியோர் நிர்மலா வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணம் 20 ஆயிரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஆட்டை பிடித்து செல்வேன் என சுதாகர் கூறியுள்ளார். அந்த ஆட்டை நிர்மல்ராஜ் ஆசையாக வளர்த்து வந்துள்ளார். அந்நேரத்தில் நிர்மல்ராஜை பற்றியும், தாயை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த நிர்மல் ராஜ் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதை கண்டு பதறி துடித்த தாய் மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.

இதுகுறித்து நங்கவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: