வெள்ளி, 8 ஜூலை, 2022

ஒரே ஆண்டில் 20 புதிய கல்லூரிகள் திமுக அரசு சாதனை! தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2022) தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

2021-22ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும். விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தருமபுரி மாவட்டம் - ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒரே ஆண்டில் செய்து காட்டிய தி.மு.க அரசு.. புதிய 20 கல்லூரிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதேபோன்று, 2022-23ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி, புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம், ஈரோடு மாவட்டம் - அந்தியூர், கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் - வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள்;

சென்னை மாவட்டம், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்; சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடம்; சென்னை, அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 7 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம்;

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திரு.ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 5 கோடியே 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி - அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஓசூர் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பர்கூர் - அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்;

தருமபுரி மாவட்டம், பூமாண்டஅள்ளி - பெரியார் பல்கலைக்கழகத்தில் 11 கோடியே 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பு விரிவாக்க மையம்; காரிமங்கலம் – அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாலக்கோடு – பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தருமபுரி – அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் - அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் – முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை - அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்;

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் – அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் – அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிவறைகள்;

சேலம் – பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 9 கோடியே 65 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன் மேம்பாடு, அடைகாப்பு மற்றும் தொழில் முனைவோர் மையங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டடங்கள், மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டடங்கள்;

திருச்சிராப்பள்ளி – பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் கருவியாக்க மையம் (Scientific Instrumentation Centre), தொழில் முனைவோர் புதுமை மையம், கலையரங்கம் கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்;
ஒரே ஆண்டில் செய்து காட்டிய தி.மு.க அரசு.. புதிய 20 கல்லூரிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரியலூர் – அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாடுதுறை – தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் – அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவாரூர் மாவட்டம் – திருவாரூர், திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி- வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரைக்குடி-அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை – இராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்;

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; திண்டுக்கல் – அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 8 கோடியே 2 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் ஆகிய அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள்;

மதுரை மாவட்டம், மேலூர் – அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள்; கீழக்குயில்குடி – அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 3 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஹைட்ராலிக்ஸ் ஆய்வகம், உலோகவியல் ஆய்வகம் மற்றும் சுற்றுசுவர்;

திருநெல்வேலி – இராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; திருநெல்வேலி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 43 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக்கான உணவகத்துடன் கூடிய நவீன சமையல் அறை மற்றும் கருவியாக்க மையம்;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம்; என மொத்தம் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை: