சனி, 14 மே, 2022

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

 மாலைமலர் : தீப்பிடித்த வணிக வளாக கட்டிடத்தில் இருந்து 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில், மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  இந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார்.


40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.  

வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது மிகவும் துயரமான சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை: