வியாழன், 3 மார்ச், 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்..

தினத்தந்தி : சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் கோர்ட்டு மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து, இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடுமையான நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: