சனி, 5 மார்ச், 2022

“மாணவர்களிடையே இன பாகுபாடு.. கழிவறையை சுத்தம் செய்தால்தான் விமான இருக்கை”: தமிழக மாணவிக்கு நேர்ந்த அவலம்!

 கலைஞர் செய்திகள் - பிரேம்குமார் : அறிவிப்புகள் அனைத்தும் இந்தியில் இருந்ததாக உக்ரைனில் இருந்து கொடைக்கானல் திரும்பிய மருத்துவ மாணவி அனுஷா மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் சென்று மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த போரின் காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் பரிதவித்தனர்.

தமிழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களை மீட்க வேண்டும் என இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து மாணவ மாணவிகள் மெல்ல மீட்கப்பட்டு வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவ மாணவிகளை இனப்பாகுபாடு பார்ப்பதாகவும், வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருவதாகவும் அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் அறிவிப்பதால் தென்னிந்திய மாணவர்கள் புரியாமல் தவித்து வருவதாகவும், கழிவறையை சுத்தம் செய்தால் தான் விமானத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படும் என இந்திய துதரக அதிகாரிகள் கூறுவதாக உக்ரைனில் இருந்து கொடைக்கானல் திரும்பிய மருத்துவ மாணவி அனுஷா மோகன் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து கொடைக்கானல் திரும்பிய அவருக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர் .

கருத்துகள் இல்லை: