திங்கள், 25 அக்டோபர், 2021

கேரளாவில் வெள்ள அபாயம் .. முல்லைப்பெரியாறு நீரை அதிகமாக எடுத்து கொள்ளுமாறு . கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

latest tamil news

தினமலர் : திருவனந்தபுரம்-'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்து உள்ளது
முல்லைப் பெரியாறு அணை. ஆனால், அதை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2,109 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.


அதே நேரத்தில், வினாடிக்கு 1,750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பருவ மழை தீவிரமடைய உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 142 அடியை எட்டும் நிலை உள்ளது. திடீரென அணையில் இருந்து அதிக தண்ணீர் திறந்தால் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.
அதனால் தற்போதே அணையில் இருந்து கால்வாய் வழியாக வைகை அணைக்கு அதிகளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தகவல் தெரிவித்தால், அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வசதியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: