வெள்ளி, 29 அக்டோபர், 2021

கொடநாடு விவகாரம்: தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

கொடநாடு விவகாரம்: தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

மின்னம்பலம் : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கொடநாடு கொலை வழக்கு தூசிதட்டி எடுக்கப்பட்டு மீண்டும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் கனகராஜ், கொடநாடு சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்தார்.
அவர் விபத்தால் உயிரிழந்தாரா அல்லது இது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, கனகராஜ் உறவினர் ரமேஷ் ஆகியோரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கொடநாடு வழக்கு தொடர்பாக தடயங்களை அளித்ததாகச் சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால், அவருடைய உறவினரான ஆத்தூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரையும் அக்டோபர் 25ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இரண்டு பேரையும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா இரண்டு பேரையும் வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து தனபால் மட்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சஞ்சை பாபா, தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: