வியாழன், 28 அக்டோபர், 2021

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்

 Mageshbabu Jayaram | Samayam Tamil :   முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு செய்த அதிர்ச்சி செயல்!
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் - கேரளா இடையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. கேரளாவில் மழை கொட்டித் தீர்க்கும் போதெல்லாம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை, அதனை இடிக்க வேண்டும், நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுக்கள் அணை பாதுகாப்பாகத் தான் இருப்பதாக ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தியுள்ளன. இதையொட்டி அணை நீர்மட்டத்தை 142ல் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் 142 அடி வரை நீர் நிரப்புவதற்கே கேரள அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

தற்போது கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளது. இந்த சூழலில் அணை குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை மலையாள நடிகர் பிரத்விராஜ் கொளுத்திப் போட, அப்படியே தீயாக பரவி கேரளா மீண்டும் கொந்தளிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக் குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியும் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை வழக்கு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழலில் அணையின் நீர் மட்டத்தை குறைக்க தேவையில்லை என்று மத்திய அரசு கூறியது. இதையடுத்து கேரள அரசு தரப்பு, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் முல்லை பெரியாறு அணையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே 139 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க உத்தரவிட வேண்டும். அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக கேரளாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதம் செய்தது.
61-மலை கிராமங்களுக்கு நடந்து சென்று மலைவாழ் மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுகவினர்!

தமிழக அரசு தரப்பில், 142 அடி வரை நீரை தேக்கினாலும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக தான் இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே உறுதிபடுத்தியுள்ளன. எனவே இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் தேக்க விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறையின் முடிவு குறித்து மனுதாரர் மற்றும் கேரள அரசு பதிலளிக்குமாறு கூறி வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு இன்று காலை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குறிவைக்கும் ஏ.ஒய் 4.2 உருமாறிய கொரோனா; கிட்ட நெருங்கிய ஆபத்து!

அதில், 126 ஆண்டுகள் பழமையானது என்பதால் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக ஐந்து மாவட்டங்களில் இருக்கும் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர். முல்லை பெரியாறு அணைக்கு சேதம் ஏற்பட்டால் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீர் மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. முல்லை பெரியாறு அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்தால் ஆபத்து ஏற்படும். எனவே நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: