வெள்ளி, 29 அக்டோபர், 2021

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் காலமானார்! மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்

 கலைஞர் செய்திகள் :  மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கோபாலபுரம் இல்லம் வந்தது நெஞ்சில் நிழலாடுகிறது” : புனீத் ராஜ்குமார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர்.


புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்திற்கு புனீத் ராஜ்குமார் வந்ததை நினைவுகூர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள் இரங்கல் செய்திக் குறிப்பில், “மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனான பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் அவர்களின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனீத் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

புனீத் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச்சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனீத் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: