புதன், 27 அக்டோபர், 2021

ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமல்படுத்தும் திமுக அரசு: கி.வீரமணி சாடல்!

ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமல்படுத்தும் திமுக அரசு: கி.வீரமணி சாடல்!

மின்னம்பலம் : ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இன்னும் பெருமளவில் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்கள் இழந்த கற்றலை மேம்படுத்திட பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.


கடந்த 18ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கான இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தபடும். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தனியார் பள்ளி மாணவர்களும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயன் பெறலாம். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார் அமைச்சர்.

ஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இந்தத் திட்டத்தையே ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் என்கிறார். நேற்று (அக்டோபர் 26) வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு - திமுக அரசு, குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்எஸ்எஸ் கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நமது பள்ளிக்கல்வித் துறை அதனை தெரிந்தோ, தெரியாமலோ ‘பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது.

ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ‘திறனறித் தேர்வு' பற்றி சில நாள்களுக்குமுன் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்; அதுபற்றிய விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அது சாதாரணமாக மதிப்பெண் போடப்பட்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு விளக்கத்தைக் கூறினாலும்கூட, நம்மால் அது கேட்டு திருப்தி அடைய முடியவில்லை. காரணம், அத்திட்டத்தை இயக்குபவர்கள் அதில் சிபிஎஸ்இ என்பது குறிப்பிடப்பட்டு, மறைமுகமாக நமது மாநில உரிமையில் தலையிட்டு அதன் மூலம் கல்விக் கொள்கையில் செயலாக்கவே என்பது விளங்குகிறதே! (சிறு வயதில் தேர்வு என்பது அச்சுறுத்துவது) அதுபோலவே, இப்போது ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்' என்பதும் ஆர்எஸ்எஸ். பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும்.

கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை-2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது. இதை தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத் தகுந்தது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் கி.வீரமணி.

மேலும் அவர், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, ப்ளஸ் டூ படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்எஸ்எஸ்) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம். அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?

ஏற்கெனவே, நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து, அதன் பிறகே பரிந்துரைகளைச் செயல்படுத்தலாம். கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம்.

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தயக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று, மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை; ஆனால், மருத்துவம், கல்வி, கூட்டுறவு, விவசாயம் எல்லாவற்றையும் மாநில ஒத்திசைவுப் பட்டியல்களில் இருந்து எடுத்துவிட்டு, ஒன்றிய அரசு பட்டியலிலேயே சேர்த்து விட்டதைப்போலவே - நாட்டில் கூட்டாட்சி நடைபெறவில்லை - ஒற்றை ஆட்சியே நடைபெறுகிறது என்பது போன்ற ஒரு நடைமுறையை, ஒன்றிய பாஜக அரசு இந்தக் கல்வித் திட்டங்கள், மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது.

இதில் முதல் பலி, கல்வி, மருத்துவம்; எதில் ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ, அதைக் குறிவைக்கும் நிலை.

எனவே, உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களை - கல்வியால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்துணை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும். அதற்குள் இப்படி விவாதத்திற்குரியவற்றில் ஈடுபடாமல், பள்ளிக்கல்வித் துறை செயல்படுவதும் மிகவும் முக்கியம்” என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார் கி.வீரமணி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: