செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

தூய்மை பணிகள் இரவிலேயே முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி

தூய்மை பணிகள் இரவிலேயே முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி

மின்னம்பலம் : பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தடுக்க சென்னையில் அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் 387 கி.மீ நீளமுள்ள 471 பஸ் சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.


மேலும், 200 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 5,000 டன் அளவிளான குப்பைகள், பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டு குப்பைகளைக் கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சாலைகளில் தூய்மை பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் போதும், குப்பைகள் அகற்றப்படும்போதும் பஸ் மற்றும் உட்புற சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மை பணி தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தூய்மை பணி மேற்கொள்ளும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 23 டிப்பர் லாரிகள் மற்றும் 1,786 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

-ராஜ்

கருத்துகள் இல்லை: