வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை.. ஒவ்வொன்றாக "பிடுங்கும்" டெல்லி போலீஸ்!

சர்ச்சை

tamil.oneindia.com : சென்னை: வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, "நீ புடுங்கிறது பூரா தேவையில்லாத ஆணிதான்"..ன்னு.. அதுதான் நினைவுக்கு வருகிறது
டெல்லி போலீசாரின் தற்போதைய செயலை பார்த்தால்.. காசிப்பூரில் நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை இப்போது ஒவ்வொன்றாக பிடுங்கி கொண்டிருக்கிறார்களாம்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.. அதேபோல, வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தன.
அளவுக்கு அதிகமான குளிர், கொட்டி தீர்க்கும் உறைபனியில் விவசாயிகள் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.. அதிலும் பெரும்பாலும் வயசான தாத்தாக்கள்தான் இரும்பு மனசுடன் டெல்லி நுழைவாயிலில் மிரட்டலாக போராட்டத்தில் உட்கார்ந்துள்ளனர்.
போராட்டம் இந்த 3 மாசமாகவே சரியான வழியில், சாத்வீகமான முறையில் சென்று கொண்டிருந்த போராட்டம், குடியரசு தினத்தன்று வன்முறை சம்பவத்தால் திசை திருப்பப்பட்டுவிட்டது.. எனினும் தங்கள் போராட்டத்தை கைவிட விரும்பாத விவசாயிகள், டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் குவிந்துள்ளனர்.



ஆணிகள் இதனால், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு டெல்லி போலீஸ் தடுப்பு வேலிகள் அமைத்திருக்கிறது... அதிலும் நடுரோட்டில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.. எப்படி அண்டை நாடுகளிடம் இருந்து இந்தியாவை காக்க வேலிகள் போடப்படுமோ, அதுபோல, டெல்லியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த கான்கிரீட் வேலிகள் போடப்பட்டுள்ளன... சிமெண்ட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன!

நடுரோடு அதேபோல, இதுவரை செய்யாத ஒரு ஐடியாவையும் டெல்லி போலீஸ் கையில் எடுத்தது... அதன்படி, நடுரோட்டிலேயே ஆணிகளை நட்டு வைத்தது.. யாரும் அந்த பக்கம் வண்டியை எடுத்து கொண்டு வந்துவிடக்கூடாதாம்.. அப்படியே வந்தாலும் அந்த வண்டி பஞ்சர் ஆகிவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஆணிகளை போட்டு வைத்திருந்தனர்.. அதாவது ஒரு சின்ன கேப் கிடைத்தால் கூட, விவசாயிகள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கொண்டிருக்கிறது டெல்லி போலீஸ்!
 

சர்ச்சை இந்த ஆணி பதிக்கும் வேலை பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. டெல்லி காவல்துறையை ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். விவசாயிகள் உங்களுக்காக வயலில் கால் பதித்து சோறு கொடுக்கிறார்கள்.. நீங்கள் அவர்களின் கால்களில் ஆணியைப் பதித்து அவர்களை புண்ணாக்கப் போகிறீர்களா என்ற விமர்சனங்கள் எழுந்தன

டெல்லி போலீஸ் அதை விட முக்கியமாக டெல்லி காவல்துறையினர் அதீதமாக செய்த காரியத்தால் இது தற்போது சர்வதேச பிரச்சினையாகி விட்டது. பாடகி ரிஹன்னா உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க டெல்லி போலீஸார் எடுத்த இந்த தேவையில்லாத நடவடிக்கைகள்தான் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. எதிரி நாட்டுக்கு எதிராக செய்வது போல விவசாயிகளுக்கு எதிராக டெல்லி போலீஸார் செய்த காரியம் சர்வதேச அளவில் போய் விட்டதால் மத்திய அரசும் கூட அதிர்ச்சியாகி விட்டது.

தமிழக எம்பிக்கள் இந்நிலையில், போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்கள் முயன்றனர்.. கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் போன்றோர், விவசாயிகளை சந்திக்க பஸ்ஸில் சென்றனர்.. அங்கே கொஞ்ச தூரத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நடந்தே சென்றுள்ளனர்.. ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். காசிப்பூரில் தடுப்பு வேலிகள், ஆணிகள் போடப்பட்டுள்ளதால் எம்பிக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடுரோடு தற்போது, ரோட்டில் பதித்து வைத்திருந்த ஆணிகளை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஆணிகளை விவசாயிகள் அகற்றுவதாக சொல்லப்படுகிறது.. அதேபோல, நடுரோட்டில் போட்டு வைத்திருந்த தடுப்பு வேலிகளையும் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. தேவையில்லாத காரியங்களை செய்துவிட்டு, தேவையில்லாத ஆணிகளை பிடுங்கி கொண்டுள்ளனர் டெல்லி போலீஸார்.

கருத்துகள் இல்லை: