ஞாயிறு, 31 ஜனவரி, 2021

சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி: நிரந்தர பணி பரிந்துரை வாபஸ்!

சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி: நிரந்தர பணி பரிந்துரை வாபஸ்!
minnambalam.com : பாலியல் வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நிரந்தர பணி பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் ஆடைக்கு மேல் மார்பகங்களைத் தொட்டால், அது பாலியல் வன்கொடுமை என்று பொருள்கொள்ள முடியாது என்றும், அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை பெண் நீதிபதி புஷ்பா கனெடிவாலா அதிர்ச்சி தீர்ப்பளித்திருந்தார். அதுபோன்று மற்றொரு தீர்ப்பில், குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் சிறுமியை அவர் பாலியல் வன்முறை செய்ததாகக் கருத முடியாது என்று அவர் தெரிவித்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெண் நீதிபதியின் இந்த தீர்ப்புகள் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என கூறி தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.

இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் ஆர்.எப்.நாரிமன் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம், நீதிபதி புஷ்பா கனெடிவாலாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை திரும்பப்பெற்றுள்ளது.

நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பும். இதன் அடிப்படையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். சில சமயங்களில் இதுபோன்று பரிந்துரைகளை கொலிஜியத்தால் கூடுதல் விவரங்களுக்காகத் திரும்பப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: