திங்கள், 1 பிப்ரவரி, 2021

தமிழ் பௌத்தமும் ஈழ தேசமும்!

கந்தரோடை
கந்தரோடை தமிழ் பௌத்த அடையாளம்
சிங்கள வரலாற்று ஆய்வாளர் லயனல் சரத் : “அண்டை நாட்டுக தமிழ் பௌத்தர்கள் இலங்கைக்கு வந்துஇருக்கா விட்டால் சிங்கள பௌத்தம் என்னும் மதத்தை இன்று காணும் வாய்ப்பே கிடைத்து இருக்காது
சோழர் கால புத்தர் சிலை
சோழர் கால புத்தர் சிலை

thuruvi.com: தமிழ் பௌத்தமும் ஈழ தேசமும்.. சரி இந்த பதிவுக்கு செல்ல முன் இலங்கையில் அரசியல் நகர்வை பார்த்து விடுவோம். பௌத்தர்கள் உலகில் சிறுபான்மையினர் இல்லை.ஆனால் சிங்களவர்கள் ? உலகின் சனத்தொகையை பொறுத்த வரை சிங்கவர்கள் மிக சிறுபாண்மையினர். மெல்ல மெல்ல நிலங்களையும் பிரித்தானியர் ஒப்படைக்கும் போது அதிகாரங்களையும் கைப்பற்றி சிங்கள மக்களுக்கு தம் அதிகாரத்தை தக்க வைக்க ஒரு பிடிமானம் தேவைப்பட்டது. அதே வேளை தம் சிறு பான்மையை இல்லாமல் செய்ய ஒரு வழி தேவைபட்டது.

பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல.இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம்.
அதையும் தாண்டி அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று.அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள்.இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது இம்மொழியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளனுக்கும் புரியும். ஆனால் அதை மக்களுக்கு தெரிவிப்பது திரிப்பது திணிப்பது என்பது அவனின் மனநிலையை பொறுத்து.

 பௌத்தத்தின் பரம்பல்பௌத்தத்தின் பரம்பல்


அதுவே “சிங்கள பௌத்தம்”. அது பின்னாளில் சிங்கள பௌத்த பேரினவாதமானது சோகக்கதை.

இலங்கையில் பாரம்பரிய பதிவுகள் கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்தம் அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.
சிங்களவர்களிடையே அவ்வப்போது இரு பௌத்த பிரிவுகளுக்கான போட்டி இடம்பெற்றது.மன்னர் ஆட்சி முதலின்றுவரை கூட அது தோற்கின்ற போது இன்று அந்த போட்டி தன்மை குறைந்து தேரவாத பௌத்தம் என்னும் பிரிவு மேலோங்கி பெரும்பாலான சிங்கவர்களால் பின்பற்றப்படுகின்றது.(மங்கிப்போன பௌத்த மார்க்கம் மகாயான பௌத்தம் ).

மகாயான பௌத்தத்தை ஆதரித்த அபய கிரி விகாரை
மகாயான பௌத்தத்தை ஆதரித்த அபய கிரி விகாரை

சரி தமிழர்கள் பௌத்தத்தை பின்பற்றினார்கள் ,வளர்த்தார்கள் என்பதற்கு என்ன சான்று ?

இலக்கியங்கள் முதல் நிலை சான்றாக அமைகின்றது.
இலங்கைக்கு சீனாவில் இருந்தோ ஜப்பானில் இருந்தோ பௌத்தம் வரவில்லை.
அன்றைய அகன்ற இந்தியாவில் இருந்து தான் வந்தது.
ஆகமொத்தம் இந்தியாவில் பௌத்தம் வளர்க்கப்பட்டது தமிழர்களால் தான்.அதிலும் பாண்டிய வம்சாவளிகளிடம் அதிக செல்வாக்கை பெற்றது.

அக்கால தமிழ் பௌத்த நூல்கள் (தமிழர்களால் எழுதப்பட்டவை – மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல )

  • மணிமேகலை – சீத்தலைச்சாத்தனார் – இலக்கிய நூல்
  • வீர சோழியம் – புத்தமித்திரனார் – இலக்கண நூல்
  • குண்டலகேசி – நாதகுத்தனார்
  • சிந்தாந்தத் தொகை
  • திருப்பதிகம்
  • விம்பசார கதைஎன்ன தான் தமிழ்நாட்டில் பௌத்தம் எழுச்சிபெற்று இருந்தாலும் அவற்றால் தொடர்ந்து ஈடுகொடுக்க முடியவில்லை.பௌத்தம் இந்தியாவில் இருந்து அகன்று போக
    ரெண்டு பெரு நூல்கள் இன்றும் முழு நூலக எஞ்சி நிற்கின்றன.

    மணிமேகலை

    வீர சோழியம்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பௌத்தத்தின் மையமாகக் இருந்தது இங்கு தர்மபாலர் என்ற பௌத்த தமிழ் அறிஞர் இருந்தார். நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த, மகாதேரர், போதி தருமர், ஆசாரிய திகநாதர், ஆசாரியதர்மபாலர், மாக்கோதை, தம்மபாலர் புத்திநந்தி, சாரிபுத்தர், வச்சிரபோதி, புத்தமித்திரர், மகாகாசவர் பெருந்தேவனார். திபங்கர தேவர், அனுருத்தர், ஆனந்ததேரர் தம்மகீர்த்தி, கவிராசர் சாரர், காசவதேரர், சாரிபுத்தர். புத்தாதித்தர், தருமபால ஆசிரியர், போன்ற 28 மேற்ப்பட்ட பௌத்த தமிழ் அறிஞர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்.

  • கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் – சோ. சிவபாதசுந்தரம். 1வது பதிப்பு: 1960. 2வது பதிப்பு: 1991
  • கௌதம புத்தர். – ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி. ஹார்னர் (மூல ஆசிரியர்கள்), த. நா. குமாரஸ்வாமி (தமிழாக்கம்), சந்தியா பதிப்பகம், 1ம் பதிப்பு: 2002.
மணிமேகலை - தமிழ் பௌத்த இலக்கியம்
மணிமேகலை – தமிழ் பௌத்த இலக்கியம்

மணிமேகலையில் இருந்து சில வரிகள்

“ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்ற மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்”

அக்காலத்தில் பௌத்த வைணவ வாதங்கள் கலகங்களாக மாறி அதை அடக்க அரசன் தலையிட்ட செய்தியை இவ்வ்வாறு பதிவு செய்கின்றது.

இலங்கையிலும் அனுராதபுர காலம் வரை தமிழர்கள் பௌத்தத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.
ரெண்டு யுத்தங்களால் தமிழர்கள் பௌத்ததின் மீதான உரிமையை விட்டு எரிய வேண்டிய நிலைக்கு வந்தனர்.

மூத்தசிவன் மீது சிங்களவர்கள்செய்த யுத்தம்
எல்லாளன் மீது துட்டகைமுனு செய்த யுத்தம் 

ரெண்டு சந்தர்ப்பத்திலும் பௌத்தம் என்பதை சிங்கள யுத்த தரப்பு முன்னிறுத்தியது.தொடர்ந்தும் பௌத்ததை பின்பற்றினால் தமிழர் தமிழ் அரசர்களுக்கு ஆதரவான அடையாளம் இல்லாது போய்விடும் என்று.

மாகனின் ஆட்சி

மாகனின் ஆட்சியும் இலங்கையில் இருந்து தமிழ் பௌத்தமும் அதன் சின்னங்களும் அழிய ஒரு காரணமாகும்

 ஈழத்தில் ரெண்டு இடங்கள் இன்றும் தமிழரின் பௌத்த அடையாளங்களை தங்கி நிற்கின்றது.
1) யாழ் தீவ கற்பம்
2)திருகோணமலையின் வட பகுதி

 

வரலாற்று ஆவணங்களில் யாழ்ப்பாண தீபகற்பம் நாக தீவு/ நாக நாடு என குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்களுக்கும் புத்தருக்கும் இடையேயிருந்த தொடர்புகள் குறித்த பல மரபுக்கதைகள் உள்ளன.இந்த தமிழ் பௌத்தக் கோயில், சக்தி பீடமான நாயினாதீவு நாகபூசனி அம்மன் கோயிலுக்கு மிக அண்மையில் உள்ளது.நாகா என்ற சொல் சில துவக்கக்கால குறிப்புகளில் நாயா என நாகனிகாவில் குறிப்பிடுவதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 150 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது.ஆனால் இது இத்தீவும் பூர்வீக குடிகளுக்கு பௌத்தத்துக்கும் இடையான தொடர்பு.நிச்சயமாக சிங்கள என்ற மொழிக்கோ கலிங்க தேசத்தில் இருந்து வந்தவர்களுக்கோ சம்பந்தமில்லை.

நாகர்களிடையே புத்தர்
    நாகர்களிடையே புத்தர்

குண்டூர் மாவட்டம் அமராவதிக்குரிய திராவிட சிற்ப மரபுகளுடன் அமைந்த வல்லிபுரம் புத்தர் சிலையானது வல்லிபுரத்தில் ஒரு இந்துக் கோயிலின் கீழே அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்- பிராகிருத மொழியில்,
சாதவாகன மரபின் ஆட்சிகாலத்திய ஆந்திரக் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களோடு ஒத்தவையாக அமைந்துள்ளன.சாதவாகன மரபின் 17 வது மன்னனான ஹல்லா (ஆட்சியில் 20-24 ) இத்தீவின் இளவரசியை மணந்தான்.பீட்டர் ஸ்லாக் எழுத்தின்படி, “வல்லிபுரம் ஒரு தொல்லியல் சிறப்புவாய்ந்த இடமாகும். இது முதல் நூற்றாண்டில் ஒரு சிறந்த வணிகத்தலமாக இருந்துள்ளது.வல்லிபுரம் சிலையின் கல்லை ஆராயும்போது இதன் காலம் கி.பி 3-4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அக்காலத்திலத்தில் அமராவதியில் கிடைத்த புத்தர் சிலையின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது.”இங்கே கிடைத்த புத்தர் சிலையை 1906 இல் அப்போதைய பிரித்தானிய ஆளுநர் ஹென்றி பிளேக் தாய்லாந்து மன்னருக்கு வழங்கினா்.

நாகப்பட்டினம் போன்று வல்லிபுரமும் அக்காலத்தில் கடற் பயணிகளும் வணிகர்களும் தங்கி செல்லக்கூடிய இடமாக இருந்தது. புத்த மற்றும் இந்து மதத்தினருக்கு புனித தலமாகவும் இருந்தது. நாகப்பட்டினம், வல்லிபுரம் ஆகிய இரண்டு இடங்களும் சீனா, சாயாம், கம்போடியா, சம்பா (வியட்நாம்) மற்றும் ஜாவா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன.

கந்தரோடை தமிழ் கல்வெட்டு
கந்தரோடை தமிழ் கல்வெட்டு

கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்தன என்பது, யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் இந்து மதம் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்புவரை தமிழ் வழி மகாயான பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக அமைகிறது.(இன்று சிங்களவர்கள் ஆதரிப்பது தேரவாத பௌத்தம்.இதுவே வடக்கே உள்ள சான்றுகள் சிங்களத்துக்கு சம்பந்தமற்றவரை என நிரூபிக்கின்றது).

கந்தரோடை
கந்தரோடை தமிழ் பௌத்த அடையாளம்

 திருகோணமலை – இராசஇராச பெரும்பள்ளி

இராசராச பெரும்பள்ளி
                                             நந்தனார் பள்ளி

இன்று வெல்கம் விகாரை எனப்படும் இடம் .இதன் இடைக்கால பெயர் வெல்காமம்.
திருகோணமலையின் அன்று இராசேந்திரசிங்க வளநாடு என் அழைக்கப்பட்டஒரு பகுதியின் ஒரு ஊரே இது.

இந்த தமிழ் பௌத்த விகாரையானது
இராசன இராசன் பெயரால் – இராசராச பெரும்பள்ளி என்றும்
வெல்காமம் என்னும் இடத்தில் இருந்ததால் வெல்காமம் பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.

இங்கு தமிழ்பௌத்தம் தொடர்பாக 16 தமிழ் சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இவை இந்த பௌத்த பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்களை ,அதை வழங்கியவர்களை சொல்லுகின்றது.
புது குடி என்னும்ஊரை சேர்ந்த ஆதித்த பேரரையன்
ஒரு விளக்கையும்
பசுக்களையும் அதற்கான தொடர்ச்சியான தீவனங்களையும் பிற பொருட்களையும்
வழக்கியதாக தமிழ் சாசனமொன்று கூறுகின்றது.

வெல்கம் விகாரை  தமிழ் கல்வெட்டு
வெல்கம் விகாரை

யார் இந்த ஆதித்த பேரரையன் .மன்னனா ?
ஆதித்தன் என்பது அவன் பெயர்.
பேரரையன் என்பது அக்கால சோழ ஆட்சியில் ஒரு பிரிவு பிரதானிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்.

தமிழ் தேரர்கள்
ஆச்சரிய புத்ததத்த மகாதேரர்

சோழநாட்டை சேர்ந்த தமிழர்.கி,பி 5 ஆம் நூறாண்டில் வாழ்ந்தவர்.
இவர் இயற்றிய நூல்கள்

  • மதுராத்தவிலாசினீ
  • அபிதம்மாவதாரம்
  • வினயவினிச்சயம்
  • உத்தரவினிச்சயம்
  • ரூபாரூபவிபாகம்
  • ஜினாலங்காராம்

இவர் சில காலம் இலங்கை மாகாவிகாரையில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.
மகா வம்ச கூற்று படி இக்காலம் மகாநாமன் என்னும் மன்னன் இலங்கையைஆண்டதாய் பதியப்படுகின்றது.

 இன்றும் இவரின் நூல்கள் இலங்கை பௌத்த சங்கத்தினரால் மதிக்கப்படுகின்றது.

 ஆசாரிய தரும பாலர்
இவர் காஞ்சி மகா விகாரையில் இருந்தவர்.அனுராதாபுரம் மகா சபையில் சில காலம் இருந்து இருக்கின்றார்.
இவரின் நூல்கள்
அபிதம்மாத்த சங்கிரகம்
பரமார்த்த வினிச்சயம்
நாமரூபப் பரிச்சேதம்

அபிதம்மாத்த சங்கிரகம் என்ற நூலின் பாளி பாதிப்பு இன்றும்
இலங்கை மகா சங்கத்தவர்களால் மட்டுமல்ல பர்மா பவுத்தர்க்களாலும் பேணப்படும் பௌத்த காவியம்.

தம்மகீர்த்தி
ரெண்டாம் பராக்கிரமபாகு காலத்தை சேர்ந்தவர்.பாண்டிய வம்சத்தை சார்ந்தவர்.

தாட்டா வம்சம் என்னும் நூலை பாளிமொழியில் எழுதினார்.

ரெண்டாம் பராக்கிரம பாகு பல தேசங்களில் இருந்து பௌத்த பிக்குகளை அழைத்து மிகப்பெரிய பௌத்த மாநாட்டை நடத்தியது இவரின் இலங்கை பிரசன்னத்தின் போது தான்.

 ஆக மொத்தத்தில் பௌத்தத்தை வளர்த்தவர்களே தமிழர்கள் தான்.ஆட்சி அதிகாரமும் அதிகார போட்டிகளும் மெல்ல சிங்களம் என்னும் மொழி பௌத்தத்தினை சுசுவீகரித்து துணை செய்த தமிழையே பாளி துணை கொண்டு இறுதியில் சிங்கள பௌத்தம் என்னும் வடிவுக்கு வானத்து நிற்கின்றது.

சிங்கள வரலாற்று ஆய்வாளர் லயனல் சரத் என்பவர்
“அண்டை நாட்டுக தமிழ் பௌத்தர்கள் இலங்கைக்கு வந்துஇருக்கா விட்டால் சிங்கள பௌத்தம் என்னும் மதத்தை இன்று காணும் வாய்ப்பே கிடைத்து இருக்காது “

என்று கூறியிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை: