வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்

kalaignarseithigal.com : தனது அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமியின் கடைசிநேர நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. “விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவை திராவிட முன்னேற்றக் கழக அரசு வெளியிடும்” என்று உறுதிபடத் தெரிவித்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“தேர்தல் என்றதும், திடீர் ஞானோதயம் வந்து நான் சொன்னதைச் செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி”: மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவரின் இந்த அறிவிப்புக்கு விவசாயப் பெருங்குடி மக்களிடையே எழுந்துள்ள பேராதரவால் அச்சமடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடன் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமியின் கடைசிநேர நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், அதை எதிர்த்து, “கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது" என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு - தடை உத்தரவு பெற்ற முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் என்றதும், பதவி பறிபோகப் போகிறதே என்ற பயத்திலும் பதற்றத்திலும், திடீர் ஞானோதயம் பிறந்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்திய நேரங்களிலெல்லாம் எள்ளி நகையாடிய முதலமைச்சர், இப்போது தோல்வியின் விளிம்பிற்கே வந்து தொங்கிக் கொண்டுள்ள நிலையில் - இந்தக் கடன் தள்ளுபடி அறிவிப்பைச் செய்தாலும், விவசாயிகள் பயனடையும் இந்தக் கடன் தள்ளுபடிக்காக ஓய்வின்றிக் குரல் கொடுத்து வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும், தற்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்தின் போதும் "விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி கொடுத்தது நான்தான். தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி!

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்து முழுமை அடைய இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமோ? மற்ற அறிவிப்புகளைப் போல, இதுவும் காற்றில் கரைந்து போய்விடுமோ? மாணவர்களின் கல்விக் கடனையும் முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; அதையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அறிவிப்புதானே, அதுவும் கடைசிக் கட்டத்தில்தானே, தாராளமாகச் செய்யலாம். நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்களின் கடைசி நேர அறிவிப்புகளைக் கண்டு யாரும் மயங்கி ஏமாற மாட்டார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: