வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

நேற்று வாடா.. இன்று வாப்பா.. பம்மிய திண்டுக்கல் சீனிவாசன்.. சிறுவனுடன் சமரசம்!


 /tamil.oneindia.com   : நீலகிரி: "நான் அமைச்சரின் செருப்பைக் கழற்றி விடுவதை எல்லாருமே வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.. இதை எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பினார்கள்.. நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளானேன்..
அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என பழங்குடியின சிறுவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது தாய் உள்ளிட்டோரை அமைச்சர் நேரில் வரவழைத்து வருத்தம் தெரிவித்தார்.. இதையடுத்து அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
நேற்று முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.. நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வரும் வழியில் கோயிலுக்குள் சாமி கும்பிட செல்ல நேர்ந்தது. அப்போது அவரது செருப்பை கழட்டிவிடும்படி அங்கிருந்த பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார்.. செருப்பு பக்கிள்ஸை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. "அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி" என்று சொன்னாலும் அமைச்சரின் விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.. அதனால் பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி புகார் தரப்பட்டு வருகிறது.



இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவனே மசினக்குடி போலீஸ் ஸ்டேஷனில் அமைச்சர் மீது புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் "அமைச்சர் சொல்கிறாரே என்பதற்காகவும், உயரதிகாரிகள், போலீஸ்காரர்கள் இருப்பதாலும்தான் நான் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை பொதுமக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட எல்லார் முன்பாக கழற்றிவிட்டேன். பக்கத்திலேயே மாவட்ட கலெக்டர், போலீலஸ் உயரதிகாரிகள் என பல அரசு அலுவலர்கள் இருந்தார்கள்.
நான் அமைச்சரின் செருப்பைக் கழற்றி விடுவதை அங்கிருந்த எல்லாருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். விழாவுக்கு அங்கு வந்திருந்தவர்கள் எல்லாருமே பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். எல்லார் முன்பும் என்னை அழைத்து இவ்வாறு செய்ய சொன்ன செயலை நினைத்து பயத்துடன் பெரும் வேதனை அடைந்தேன்.

நான் செருப்பு கழற்றிவிட்ட காட்சி எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பினார்கள்.. இதனால் நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளானேன்.. நான் பயந்த நிலையிலும் மற்றவர்கள் கேலி செய்வார்களோ என்ற அச்சத்திலும் அழுதுகொண்டே வீட்டிற்குள் இருந்தேன்.. எனது பெற்றோரும் ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தினரும் எனக்கு ஆறுதல் சொல்லி.. தைரியம் தரவேதான்.. நான் புகார் தெரிவிக்க மனரீதியாக தயாரானேன்.

புகார் எனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். நேற்றெல்லாம் திராவிடர் விடுதலை கழகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் போலீசில் புகார் தந்த நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவனே அமைச்சர் மீது புகாரை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதனால் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

வருத்தம் இந்த நிலையில் சிறுவனின் தாயிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் செருப்பை கழற்றிய சிறுவன், அவரது தாய் மற்றும் பழங்குடியினர் 50-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தங்களது வாகனத்தில் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு தன் மீது போலீசில் புகார் கொடுத்த சிறுவன், அவனது தாய், பழங்குடியினர் நிர்வாகிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து பேசினார். அப்போது சிறுவனின் பெற்றோரிடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: