புதன், 5 பிப்ரவரி, 2020

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! இபிஎஸ்-ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!

ops-epsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில், சபாநாயகர் தனபாலை நோக்கி உச்சநீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்விகளால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அதிமுக!
தலைமைசெயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சர்களிடம் மட்டும் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதில் பல்வேறு அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஓபிஎஸ்சுடன் தனியாக ஆலோசித்தார் எடப்பாடி. அதில், பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை குறித்து விரிவாக அலசியிருக்கிறார்கள்.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவு சீனியர்களிடம் விசாரித்தபோது, ‘’ உச்சநீதிமன்றம் என்னதான் உத்தரவிட்டாலும் சபாநாயகருக்கு ஆணையிடும் அதிகாரம் அதற்கு கிடையாது.

சபாநாயகரின் அதிகாரம் குறித்து ஆராயும் மனு ஏற்கனவே அரசியல் சாசன பெஞ்சில் இருக்கிறது. அதன் முடிவு தெரியாமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இதெல்லாம் தெரிந்ததால்தான், மனிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வழக்கில், சபாநாயகரின் அதிகாரம் குறித்து நாடாளுமன்றம் ஆராய வேண்டும் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
   
அதனால், தற்போதைய நீதிபதிகளின் கேள்விகள் சபாநாயகரை பாதிக்காது. இன்னும் சொல்லப்போனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை ஆதாரித்து வாக்களிக்க வேண்டும் என தங்களுக்கு கொறடா உத்தரவிடவே இல்லை என்று ஓபிஎஸ் தரப்பும், எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா எந்த புகாரையும் தமக்கு தெரிவிக்கவில்லை என்று சபாநாயகர் தரப்பிலும் சொல்வதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், இந்த வழக்கு ஓபிஎஸ் தரப்பினரை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
             
இருப்பினும் இது குறித்து தலைமை அரசு வழக்கறிஞர்களிடம் விரிவாக ஆலோசித்துவிட்டு சில முடிவுகளை எடுக்க இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் திட்டமிட்டுள்ளனர் ‘’ என்று விவரிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: