
திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான வீரபாண்டி ராஜாவை மாற்றி, தேர்தல் பிரிவு செயலாளராக நியமித்தது. மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான சிவலிங்கத்தை கிழக்கு மாவட்டத்துக்கு நியமித்துவிட்டு, ஏற்கனவே தேர்தல் பிரிவு செயலாளராக இருந்த செல்வகணபதியை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது,
வீரபாண்டி ராஜாவின் மாவட்ட அதிகாரம் பறிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர், சில நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் வீரபாண்டி ராஜா, செல்வகணபதி, சிவலிங்கம் ஆகியோர் நேற்று முன் தினம் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர். செல்வகணபதி, வீரபாண்டி ராஜா இருவரும் நேற்றே சேலத்துக்கு வந்துவிட்டனர்,
இந்நிலையில்தான் சேலத்தின் வழக்கப்படி புதிய பொறுப்பேற்ற செல்வகணபதி இன்று காலை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். ஏராளமான தொண்டர்கள் செல்வகணபதியை வரவேற்றனர். அப்போது, திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். ‘ஐயா தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞர் முகவும், பேராசிரியர் பெருந்தகையும், சேலத்து சிற்பி வீரபாண்டியாரும், கழகத் தலைவர் தளபதியாரும் ஊட்டி வளர்த்த கழக உணர்வை எவன் அழிக்க நினைத்தாலும் அழிந்து போவது நிச்சயமே’ என்று முழக்கங்களை எழுப்பினர்,
இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ராஜா தன்னுடன் வராத நிலையிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய செல்வகணபதி.... அடுத்து நேராக வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்றுவிட்டார். அங்கே இருவரும் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். இந்த நிகழ்வு சேலம் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக