சனி, 8 பிப்ரவரி, 2020

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு ... உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும்.

சிவசங்கர் எஸ்.எஸ் : மாண்புமிகு அமைச்சர் (டாக்டர்) விஜயபாஸ்கர்,
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்நேரம் பதவி விலகி இருப்பீர்கள். ஆனால் வாய்ப்பே இல்லை.
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி வகையறாவான உங்களுக்கு அதெல்லாம் உறுத்தவே உறுத்தாது.
நாடு எக்கேடு கெட்டால் என்ன, நாட்டு மக்கள் எப்படி சீரழிந்தால் என்ன, என் கல்லா தான் முக்கியம் என ஆட்சியை நடத்தும் கல்லாபெட்டி பழனிசாமியின் கம்பெனி தானே நீங்கள்...
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, டாக்டர் லட்சுமி நரசிம்மன் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வழி நடத்தினார். அதற்கு அவரைப் பழி வாங்கினீர்கள். ராமநாதபுரத்திற்கு மாற்றல் செய்தீர்கள். அவர் அசரவில்லை. தனக்காக கவலைப்படவில்லை. தன்னோடு போராடியவர்களுக்கும் மாறுதல் வந்தது தான் அவருக்கு வருத்தம் தந்தது.
சங்கத்து நிர்வாகிகள் மாறுதல் செய்யப்படுவது அரசியல் வழக்கம் என்பது அவரும் அறிவார். ஆனால் அதைத் தாண்டி 200க்கு மேற்பட்டோர் மாறுதல் செய்யப்பட்டது தான் அவருக்கு மன அழுத்தம் வர காரணம். தன்னால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களோ என்ற வருத்தம் தான் அது.

மாணவப் பருவத்திலிருந்தே போராட்டக் குணம் நிறைந்தவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். தனக்காக அல்லாமல் மற்றவர்களுக்காக போராடும் உணர்வு படைத்தவர். அதனால் தான் அரசு பணிக்கு வந்தவர் "தன் வீடு, தன் வேலை, தன் வாழ்வு" என சிலரைப் போல் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மற்றோருக்காக களம் கண்டார்.
நியாயமான கோரிக்கைகளுடன் தான் களம் இறங்கினார். அரசின் கைக்கூலியான இன்னொரு சங்கம் இவரை கேவலப்படுத்தியது. கைக்கூலிகள் துணையோடு போராட்டத்தை ஒடுக்க மந்திரி நீங்களும் அடாவடி செய்தீர்கள்.
நாட்டு மக்களின் நலம் காக்கும் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுவதை விட, கஜானா நிரம்புவதே முதன்மையானது உங்களுக்கு. இதில் முதல்வர் கனவு வேறு உங்களை தூங்க விடவில்லை. முதல்வராக முதலீடு செய்ய அள்ளிக் கட்டுகிறீர்கள். அத்தோடு லட்சுமி நரசிம்மன்களின் பாவத்தையும் மூட்டை கட்டுங்கள். இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது.
போராட்டக் கோரிக்கைகளை எள்ளி நகையாடினீர்கள். டாக்டர் லட்சுமி நரசிம்மன் வழிநடத்திய போராட்டத்தை முடக்கினீர்கள். வெற்றி பெற்றதாக கொக்கரித்தீர்கள். இப்போது வாய் திறங்கள், பார்ப்போம்.
போராட்டத்தின் போது, டாக்டர் லட்சுமி நரசிம்மன் போராடி தங்களை சிக்கலில் இழுத்து விட்டதாக சில டாக்டர்கள் கூட விமர்சனம் செய்தார்கள். அவர்களில் சிலர் தங்கள் தவறை உணர்ந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தவறை ஒப்புக் கொள்ள முடியாமல் மனதுக்குள் மருகுகிறார்கள்.
ஆனால் அந்த டாக்டர்களை போல, டாக்டர் விஜயபாஸ்கர் என பெயரைப் போட்டுக் கொள்ளும் தாங்கள் உணர மாட்டீர்கள். திருந்தவும் மாட்டீர்கள்.
# பதவியும், பணமும் கண்ணை மறைக்கலாம். ஆனால், காலம் திருத்தும் !

கருத்துகள் இல்லை: