வியாழன், 6 பிப்ரவரி, 2020

எம்எல்ஏ வேட்பாளரை பிரசாந்த் கிஷோர்தான் முடிவு செய்வாரா? திமுகவினர் கலக்கம்!

prashant kishor - mk stalin
MKS222nakkheeran.in - ஆதனூர் சோழன் : திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. 70 ஆண்டு வரலாறைக் கொண்ட மாபெரும் இயக்கமான திமுக, தனது தொண்டர்கள் பலத்தையும், அமைப்புகளின் பலத்தையும், கட்சி நிர்வாகிகளின் தேர்தல் வேலையையும் நம்பாமல் ஒரு கார்பரேட் ஆளை எப்படி நம்புகிறது என்று திமுகவினர் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால், திமுகவினரில் ஒரு பகுதியினர், சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்குவதை எதிர்கொள்ளவே பிரசாந்த் கிஷோரின் கார்பரேட் கம்பெனி உதவும் என்கிறார்கள். திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சிகளை முறியடிக்கவும், மீடியாக்களில் திமுகவின் செய்திகளை பாசிட்டிவாக இடம்பெறச் செய்யவும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
2016 தேர்தலுக்கு முன் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நமக்கு நாமே பயணத்தை சுனில் என்பவரின் தலைமையிலான ஒரு நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்தது. அந்தப் பயணத்திட்டம் ஸ்டாலினை தமிழகம் முழுவதும் எல்லாத் தரப்பினரிடமும் நெருக்கமாகக் கொண்டு சென்றது. அவருடைய அந்தப் பயணம் அனைத்து மீடியாக்களிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் ஸ்டாலினின் உழைப்பையும், மக்களுடனான அவருடைய நெருக்கத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில்தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்காக வேலை செய்ய பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியிருக்கிறது. அவரும் திமுகவுக்காக பிரச்சார உத்திகளை வகுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதான் திமுகவினரை பல வகையில் கலக்கமடையச் செய்திருக்கிறது.

அதாவது இத்தனை நாட்கள் கட்சிக்காக வேலை செய்த திமுகவினரின் உழைப்பை கட்சித்தலைமை உதாசீனப்படுத்துகிறதா என்பதே அவர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. கட்சிக்காரனை வேலை வாங்குவதற்கு கட்சித் தலைமையால் முடியவில்லை. கட்சி நிர்வாகிகளை தலைமை நம்பவில்லையா என்றெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலேசென்று, சட்டப்பேரவை வேட்பாளர்களைக்கூட பிரசாந்த் கிஷோரின் கம்பெனிதான் முடிவு செய்யுமாமே என்றுகூட கவலையோடு கேட்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்திய நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்காக பணத்தை செலவழித்தவர்கள், சொந்த வேலைகளை விட்டுவிட்டு கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் புதுசா என்ன செய்யப்போகிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது. இத்தனைக்கும், திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் செயலாளராக பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் எம்எல்ஏ இருக்கிறார்.

இந்த அணி உருவாக்கப்பட்டபோது சமூக வலைத்தளங்களில் சிறப்பாக பணிபுரியும் ஆட்கள் பொறுப்பை எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த அணியின் வேலை, முகநூல், ட்விட்டரில் பதிவுகள் போடுவதல்ல. வார்டு வாரியாக வாக்காளர் விவரங்களை சேகரிப்பது என்று கூறப்பட்டது.

ஏற்கெனவே திமுக ஐடி பிரிவு சேகரித்த டேட்டாக்கள் இனி பிரசாந்த் கிஷோரிடம் கொடுக்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். நாம் சேகரித்த புள்ளிவிவரங்களை அடுத்த கம்பெனியிடம் கொடுத்தால், அவர்கள் அதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த மாட்டார்களா என்றும் கேட்கிறார்கள்.
  DMK -

ஆனால், இந்தத் தேர்தலுக்கு முன் கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதியை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் திட்டம் வகுத்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. மீடியா ஆதரவு இல்லாத திமுகவுக்கு மீடியா ஆதரவை விலைகொடுத்து பெற்றுத் தருவார். இதற்காக மீடியாக்களில் நேரம் வாங்குவார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் எந்த வகையில் திமுகவுக்கு உதவுவார்? அவர் எந்த விஷயங்களில் எல்லாம் தலையிடுவார். மாவட்டச் செயலாளர்களின் அதிகாரங்களில் தலையிடுவாரா? அவர் சொல்படிதான் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டுமா? அப்படி செயல்பட்டால் கட்சிக்காரர்களிடம் தங்கள் மதிப்பு குறைந்துவிடாதா? திமுகவில் மாவட்டச் செயலாளரின் அதிகாரம் இனி அம்போதானா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் வலம் வருகின்றன.

மிகக்குறிப்பாக, பிரசாந்த் கிஷோரின் அதிகாரம் கூட்டணிக் கட்சிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துமா? கூட்டணிக் கட்சிகளின் வியூகத்தில் இவர் தலையிட்டால் அவர்கள் ஏற்பார்களா? என்கிற கேள்விகளை கூட்டணிக் கட்சியினர் எழுப்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை: