வியாழன், 21 நவம்பர், 2019

திருமா - காயத்திரி ரகுராம் ..போர் நடக்க வேண்டிய இடத்தில் moral policing நடக்கிறது ..... Scum = அழுக்கு தீண்டத்தகாதது!

Shalin Maria Lawrence : நேர்மையாக சொல்லவேண்டுமானால் கோவில் சிலை ஆபாசம் என்கின்ற கருத்து சனதான எதிர்ப்பின் ஒரு பகுதியா என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இரட்டை வேடம் போடும் சனதான வாதிகளை நியாயமாக கேள்வி கேட்கும் வகையில் அது கேட்கப்பட்டிருக்கிறது என்று அனுமானித்து கொள்கிறேன்.
ஏனென்றால் ஹிந்து மதம் வரலாற்றில் எப்படி இருந்தது அந்த சிலைகள் ஹிந்து மதத்தை சேர்ந்ததா இல்லை அது ஆசீவகமா தாந்திரிகமா என்ற ஆய்வுகளை பற்றி நான் இப்பொழுது விவாதிக்கப் போவதில்லை.
ஆனால் இந்த நிகழ்காலத்தில் தற்பொழுது இந்துத்துவ அரசியல் எப்படி இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களை விட அந்த மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகள் காமத்தையும்
பாலியலையும் எப்படி பார்க்கின்றன என்கிற விஷயம் மிக முக்கியமானது.
குறிப்பாக கலாச்சாரம் ,அதுவும் பாரத கலாச்சாரம் என்கின்ற பெயரில் இந்த அரசியல் கும்பல் அப்பாவிகளை நடுரோட்டில் வேட்டையாடி இருக்கிறது. சின்னஞ்சிறுசுகள் கொண்டாடும் காதலர் தினத்தின் வெகுளி தனங்களில் கூட அசிங்கத்தையே தேடி தேடி பார்த்து இருக்கின்றது. சினிமா எழுத்து கலை என்று எல்லா இடங்களிலும் கலையை தாண்டி கலாச்சாரம் என்ற பெயரில் moral policing செய்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.
இது கூட பரவாயில்லை மறைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஹுஸைன் ஹிந்துக் கடவுள்களை வரைய முற்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட கொலை மிரட்டலும் மன உளைச்சலும் சொல்லி மாளாது.

கலையின் பெயரால் காதலையும் காமத்தையும் நிர்வாணத்தையும் கலைஞர்கள் கொண்டாட முற்படும் போதெல்லாம் இந்த மத அரசியல்வாதிகள் கலாச்சாரம் என்கின்ற பெயரில் செய்த அக்கிரமங்கள் ஆயிரம்.
ஆக அண்ணன் திருமாவளவன் அவர்களின் பேச்சு இந்த மத அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை குறிப்பதற்காகவே இருந்தது என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.
அப்படியே இந்திய பிரஜையாக இந்தியாவில் யாருக்கும் எதையும் நாகரீகமாக விமர்சிக்கும் உரிமை உள்ளது. திருமாவளவன் விமர்சித்து விட்டார். அவர் மனதில் என்ன ஓடியது என்பதை கூட விட்டுவிடுவோம் ஆனால் விமர்சிப்பது அவரது உரிமை.
ஆனால் இந்த நேரத்தில்தான் காயத்ரி ரகுராம் என்கின்ற முன்னாள் நடிகை ஒருவர் அதாவது கடந்த சில வருடங்களாக அரசியல் பேசிவிட்டு அரசியல் வேண்டாம் என்று விலகி கொண்ட ஒரு மார்க்கெட் இல்லாத நடிகை திடீரென்று திருமாவளவனை வாய்க்கு வந்தவாறு ஏசுகிறார்.
இல்லை இல்லை வாய்க்கு வந்தவாறு இல்லை.... புத்திக்கு தோன்றியது போல் பேசுகிறார். தன் ஜாதி புத்திக்கு தோன்றியது போல் பேசுகிறார்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த மத அரசியல் வாதிகள் இந்த விஷயத்தில் திருமாவும் தங்களைப் போலவே யோசிக்கிறார் என்று அவரோடு ஒன்றித்து சென்றிருக்கவேண்டும் ஆனால் மாறாக காயத்ரியை ஏவி விடுகிறார்கள்.ஏன்?
ஏனென்றால் தற்பொழுது வழங்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு மற்றும் ஐஐடி பாத்திமா கொலை இவைகளை திசை திருப்பவே இப்படி காயத்ரியை தூண்டி விட்டிருக்கிறார்கள்.
இங்கேதான் காயத்ரியின் ஜாதி வெறி வெளிப்படுகிறது. Scum என்று முதல் வரியில் திருமாவை அழைக்கிறார் என்றால் ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அழுக்கு தீண்டத்தகாதது என்று பொருள் அடுத்த வரி இன்னும் சுவாரஸ்யம் .அவர் ஆண்மை சம்பந்தப்பட்ட ஒரு இழிவான சொல்லி அங்கே புகுத்துகிறார். அடுத்து திருமாவுக்கு மடிசார் அனுப்ப சொல்லி அவரை இழிவுபடுத்துவது. அதற்காக தன்னுடைய சொந்த பாலினத்தையே இழிவு படுத்திக் கொள்கிறார்.
அவரின் அறிக்கைகளில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. அதாவது அவர் திருமாவை சனாதான ரீதியிலே திட்டுகிறார் .
முதலில் சாதிய வன்மம் பின்பு பாலினத்தை கொண்டு இழிவு செய்தல். சனாதானத்தின் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்.
ஆக தெள்ளத்தெளிவாக காயத்ரி அண்ணன் திருமாவளவன் மீது கக்கியது தனிமனித வன்மம் அல்ல அது சாதிய வன்மம்.
இதற்கு முன் மதங்களை விமர்சித்த அரசியல்வாதிகள் எல்லாம் விட்டுவிட்டு
திருமாவளவனை இழிவு செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவரை சமூகரீதியாக என்னவாக பார்க்கிறார்கள் என்பது முக்கியம்.
அதுமட்டுமல்ல அண்ணன் திருமா சனதானத்தை எதிர்ப்பதற்காக களப்பணியில் ஓயாமல் இருக்கிறார். அதுவும் முக்கிய காரணம்.
அவர் ஒரு மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி.சனதானத்தை இதைவிட தீவிரமாக விமர்சித்து அணுகியுள்ளார். ஆனால் அதே நேரம் சனதான அமைப்பின் மீதுள்ள தனது எதிர்ப்பு ஹிந்து மதத்தை பின்பற்றும் சாமானிய அப்பாவி மக்களை தவறாக தாக்கி விட கூடாது என்று அவர்கள் அழைப்பின் பேரில் அவர்களின் சங்குகளில் பங்கேற்று ஏனோரின் விமர்சனங்களையும் பெற்றுள்ளார்.
அவர் எந்த நிலையிலும் மனிதர்களை அவமதித்தது இல்லை.அவரின் சண்டை அமைப்புகளோடு.
இந்த நிலையில் இப்படி ஒரு இழிவு அவரை நோக்கி வீசப்பட்டபோது அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதே வேளையில் அதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதி விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தை எடுத்து சொல்லுவார்கள் என்று நினைத்தேன்.
காயத்ரி மீது SC/ST வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து அவரின் சாதித் திமிரோடு அவரை சிறைக்கு அனுப்புவார்கள் என்று எண்ணினேன்.
ஆனால் நிகழ்ந்ததோ வேறு திரும்பத்திரும்ப காயத்ரியின் தனிமனித ஒழுக்கத்தின் மீது விமர்சனம் வைக்கப்பட்டு குறிப்பாக அவரின் சினிமா தொழில் ஆடை குடிப்பழக்கம் போன்ற தனிமனித தேர்வுகளை மட்டுமே விவாதித்து இதற்கான எதிர்ப்பு என்பது ஒரு குண்டு சட்டிக்குள் சுருங்கி விட்டது.
காயத்ரிக்கு திருமாவளவன் மீது தனிப்பட்ட ரீதியில் வெறுப்பு இருந்து அதன் மூலம் வந்து விழுந்த வார்த்தைகள் இது அல்ல. தெளிவாக பார்ப்பனிய புத்தியோடு பார்ப்பனிய சமூகம் காயத்ரியை உபயோகித்து பழியைத் தீர்த்துக் கொண்டது. இது பார்ப்பனிய சமூகத்திற்கும் திருமாவளவன் என்னும் முற்போக்கு சக்திக்கும் நடக்கும் சண்டை.
ஆக இந்த போராட்டம் என்பது பார்ப்பனியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக வெடித்து இருக்க வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் காயத்ரியின் சாதிவெறியை தான் இங்கே விவாதித்து இருக்க வேண்டும்.
ஆனால் கொஞ்சம் கூட இலக்கே இல்லாமல் போராட்டம் நகர்ந்தது.
போர் நடந்திருக்க வேண்டிய இடத்தில் moral policing எ நடந்தது.
குடித்த எல்லோரும் அண்ணன் திருமாவளவனை இழிவாக பேசி கொண்டிருக்கிறார்களா?
சினிமாவில் ஆபாசமாக நடிக்கும் எந்த நடிகையாவது திருமாவளவனை திட்டி இருக்கிறாரா?
ஆக காயத்ரி திருமாவை திட்டியதற்கு காரணம் அவரின் ஜாதி வெறி புத்தி.
அதுமட்டுமல்ல இவ்வளவு நாட்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஜாதி வெறி கொண்டு அண்ணன் திருமாவை திட்டுபவர்கள் எல்லா நிலையிலும் எல்லா பணிகளிலும் இருக்கிறார்கள்.
மீண்டும் சொல்லுகிறேன் அண்ணன் திருமா வுக்காக சரியான இலக்கை நோக்கி போராட வேண்டும். அப்பொழுது தான் இந்தப் போராட்டங்கள் சனதானம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆக இருக்கும்.
காயத்ரி வெறும் கருவிதான். இந்த கருவியை ஏய்தவர்கள் சனதான வாதிகள். பார்ப்பனியம் எனும் அமைப்பு.அதனால்தான் அவரின் கூட்டணி கட்சியிலிருந்து கூட அவருக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை.ஏனென்றால் சனதானத்தை எதிர்ப்பது எளிதல்ல.
இது பெரிய போர். குழாயடி சண்டை அல்ல.
நமது போர் பார்ப்பனியத்துடன்.தனி மனிதர்களோடு அல்ல.
அமைப்பாய்த் திரள்வதுஎன்பது அமைப்புகளோடு மோதுவதற்கு தானே ஒழிய ஈ எறும்பு கரப்பான் பூச்சிகளோடு மோதுவதற்கு அல்ல.
அண்ணன் திருமா பொது சமூகத்தின் தலைவர் அதை காயத்ரி போன்ற அரைவேக்காடுகளால் நினைத்தாலும் மாற்ற முடியாது. மேலும் அவரை சுற்றி அதே பொது சமூகத்தை சேர்ந்த நல்லவர்களும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: